எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மூதாட்டி பத்மாவதி இறந்த தகவல் கிடைத்ததும் அரக்கோணம் ரயில்வே போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி பத்மாவதியால் நடக்க முடியாது என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் தண்டவாள பகுதிக்கு யார் தள்ளிக் கொண்டு வந்தார் என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மணவூர் ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பத்மாவதியை வீல்சேரில் உட்கார வைத்து அவரின் மகன் பார்த்தசாரதி தள்ளி வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. உடனடியாக பார்த்தசாரதியிடம் போலீஸார் விசாரித்தனர். முதலில் நான் இந்தக் கொலையை செய்யவில்லை என மறுத்த பார்த்தசாரதி, போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பார்த்தசாரதியை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸார் கூறுகையில், “மதுவுக்கு அடிமையான பார்த்தசாரதி, ஆவடியில் உள்ள நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்த பார்த்தசாரதி, அம்மா பத்மாவதியை பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்திருக்கிறார். பார்த்தசாரதியின் அண்ணன்கள் யாரும் பத்மாவதியை கவனித்துக் கொள்ள முன்வரவில்லை. அதனால்தான் இந்தக் கொடூர முடிவை பார்த்தசாரதி எடுத்திருக்கிறார். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறோம்”‘ என்றனர்.