Tamilnadu
oi-Vishnupriya R
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில் கணவர், கர்ப்பிணி மனைவி, மகள் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த கூலித் தொழிலாளியை 4 மாதங்கள் கழித்து போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூரை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் மகன் கவியரசன் (21). அவரது மனைவி அனிதா (21), குழந்தை சாய் ஸ்ரீ இரண்டரை வயது. இவர்கள் மூவரும் திருப்பத்தூரில் இருந்து ஓசூருக்கு பைக்கில் வேலைக்குச் சென்றுள்ளனர். அனிதா 6 மாத கர்ப்பமாக இருந்தாராம்.

அது போல் மட்றபள்ளி அடுத்த ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மகன் சசிகுமார் (42). இவர் பெங்களூரில் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தனது சொந்த ஊருக்கு பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி தனது மகளுடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த கவியரசனின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது கவியரசனின் இரு சக்கர வாகனத்தில் இருந்த இரண்டரை வயது குழந்தை முகத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. விபத்து ஏற்பட்டதும் அங்கு வந்தவர்கள், பலத்த காயமடைந்த கவியரசனையும், அனிதாவையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அனிதா உயிரிழந்தார். இந்த நிலையில் கவியரசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய சசிகுமார், அவர்களுக்கு என்ன ஆனது என்று கூட பாராமல் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தபோது விபத்து ஏற்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றவர் யார் என்று தெரியாமல் போலீசார் தேடி வந்தனர்.
அப்போது சசிகுமார் சம்பவ இடத்தில் விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போது அந்த இருசக்கர வாகனம் கர்நாடகா பதிவு எண் கொண்டதாக இருந்தது அதன் பின்பு போலீஸார் கர்நாடகா சென்று இருசக்கர வாகனத்தின் முதல் ஒனரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு தனது இருசக்கர வாகனத்தை விற்றாக தகவல் தெரிவித்துள்ளார்.
போலீஸார் பைக்கின் முதல் ஓனரிடம் விசாரித்த விவரம், சசிகுமாருக்கு தெரியவர அவர் திருப்பத்தூரில் இருந்து தப்பி ஓடி திருப்பூரில் தனது குடும்பத்துடன் செட்டில் ஆகி உள்ளார். அது மட்டும் இன்றி தனது தொலைபேசியில் இருந்து சிம்கார்டை மட்டும் தனியாக எடுத்து அவ்வப்போது வெவ்வேறு தொலைபேசிகளில் சிம் கார்டை போட்டு பேசியுள்ளார்.

அப்போது போலீஸார் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது திருப்பூரில் டவர் லொகேஷன் காண்பித்து அதன் காரணமாக அங்குச் சென்று போலீசார் சசிகுமாரை கைது செய்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு, நான்கு மாதங்கள் கழித்து தலைமறைவான கூலி தொழிலாளியை திருப்பூரில் இருந்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கால் உடைந்து சிகிச்சையில் இருந்த கவியரசனும் கடந்து சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சசிகுமார் இருசக்கர வாகனத்தில் மோதியதின் காரணமாக கணவன், மனைவி, மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.