திருப்பரங்குன்றம்: "உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு; மதக் கலவர முயற்சி" – முத்தரசன் காட்டம்!

Spread the love

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு, பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் நடத்த முயன்று பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த தீர்ப்பை நிறைவேற்ற மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த நிலையில், அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் கடவுளின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் கும்பல் முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

முத்தரசன் பேச்சு

“திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தூணில் தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கான எந்த சான்றும் இல்லை. அமைதி பூங்காவாக திகழக்கூடிய தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியாலும், அவர்கள் நம்பி இருக்கக்கூடிய எடுபடிகளாலும் காலுன்ற முடியவில்லை.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

இங்கே கடவுளின் பெயரால் ஒரு கலவரத்தை உருவாக்கி அற்பத்தனமான அரசியல் ஆதாயத்தை பெறலாம் என்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் உயர் நீதிமன்ற நீதிபதியே ஒரு தவறான தீர்ப்பை வழங்கி இருக்கிறார். அவர் அந்த பொறுப்பிற்கு தகுதியானவரா எனக் கேள்வி எழுந்திருக்கிறது.

அவர் குறிப்பிடுகிற அந்த கல், தீபம் ஏற்றப்படுகிற கல் அல்ல. வெள்ளையர் ஆட்சி காலத்தில் நிலம் அளந்து கல் ஊன்றுவார்கள். அந்த எல்லைக்கல்லில் போய் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அந்த தீர்ப்பு உள்நோக்கம் உடையது. அந்த தீர்ப்பை பயன்படுத்தி மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஒரு மத கலவரத்தை உருவாக்கி, அதன் மூலமாக அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்கிற முயற்சியில் ஆர்எஸ்எஸ் கும்பல் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து அதை முறியடிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் கோவில் - தர்கா
திருப்பரங்குன்றம் கோவில் – தர்கா

இந்துக்கள் – இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்

அம்பேத்கருடைய நினைவு நாளில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் அனைவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களோ இந்துக்களோ ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அங்கே இருக்கக்கூடிய இந்துக்கள் யாரும் அங்கே தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை.

நீதிமன்றத்தை சாதகமாக பயன்படுத்தி, அதன் மூலமாக கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பது வெளியில் இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய அடிவருடிகளின் நோக்கம்.” எனப் பேசியுள்ளார் அவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *