மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும் நோக்கோடும், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவ கிராமம் மது ஒழிப்புக்கு எதிராக ஒரு முன்மாதிரியான அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.
”மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்!” என்ற முழக்கத்துடன் ஊர் பஞ்சாயத்து சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனர் தற்போது அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கிராமத்தின் சுகாதாரம் மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டு, திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு… இதை மீறினால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் ஊர் மக்கள் ஒன்று கூடி அறிவித்து உள்ளனர்.
மேலும் திருமணமானவர்கள் குடித்துவிட்டு வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறு செய்து புகார் வந்தால், அவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மது அருந்துபவர்கள் குறித்து ஊர் தலைவர்களிடம் ஆதாரம் தரும் நபர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து கடந்த 10 நாள்களாக கிராமத்தில் குடும்பச் சண்டைகள் இன்றி அமைதி நிலவுவதாக ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.