
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனாலும் அவ்வப்போது மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. இந்த நிலையில் ஹார்மூஸ் நீரிணை மீது அமெரிக்க ஹெலிகாப்டர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. இதனை ஈரான் படை சுட்டு வீழ்த்தியது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது.
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் சரியான பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் உயர்மட்டக் கூட்டு ராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணையை கடக்க முயலும் கப்பல் எதுவாக இருந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.