கோடைக்காலத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட வேனல்கட்டி, அம்மை, கண் நோய்கள், சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர்த் தொற்று, அக்கி, விஷ ஜுரங்கள் எனப் பல நோய்களும் பரவத் தொடங்கும்.
இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள மருத்துவ வழிகள் பல சொல்லப்படுகின்றன. அதே நேரத்தில் ஆன்மிகமும் நமக்கு வழிகாட்டுகிறது. ஒரு தலத்தில் ஈசன் குளுமையே வடிவாகக் காட்சி அருள்கிறார்.
அந்த ஈசனை வழிபட்டால் ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வரும், உஷ்ண பாதிப்புகள் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் அந்த அற்புதத் தலத்தைத் தரிசிப்போம்.
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் திருவீழிமிழலை நோக்கிச் சென்றால் அன்னியூரை அடையலாம். இங்குதான் ஈசன் அக்னீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
தன்னை வழிபட்ட அக்னிக்கு, கைகளையும் நாவையும் வழங்கிய ஈசன், அக்னியைப் போலவே இங்கு வந்து வழிபடும் சகலருக்கும் நோய் தீர்க்கும் வைத்தியனாகவே இருப்பதாகவும் உறுதி கூறினாராம்.

ஈசனை மதியாது தட்சன் நடத்திய யாகத்தில் சகல தேவர்களும் கலந்துகொண்டனர். இதனால் கோபம் கொண்ட ஈசன், அனைவருக்கும் தண்டனை அளிக்க வீரபத்திரருக்கு ஆணையிட்டான்.
யாகத்தின் முக்கியப் பாகமாகக் கலந்துகொண்ட அக்னிக்கும் தண்டனையாக அவனது கைகளும் நாவும் துண்டிக்கப்பட்டன. விளைவு, அக்னியின் ஒளியும் வெம்மையும் மறைந்துபோனது. இதனால் உலக உயிர்கள் வாடத் தொடங்கின. தனது குறைகள் நீங்க அக்னி, இத்தலத்துக்கு வந்தான்.
இங்கு லிங்கப் பிரதிஷ்டை செய்து, ஒரு தீர்த்தம் உருவாக்கி, வன்னி இலைகளால் ஈசனை அர்ச்சித்து வழிபட்டான். பிறகு ஈசனின் அருளால் சாபம் நீங்கப்பெற்றான். வன்னி மரக்காடு என்பதாலும், அக்னி வழிபட்டதாலும், இவ்வூர், “அன்னியூர்’ என்றானது. ஈசனும் ‘அக்னிபுரீஸ்வரர்’ என்ற திருநாமம் பெற்றார். அதுவே பின்னாளில் அக்னீஸ்வரர் என்றானது என்கிறார்கள் பக்தர்கள்.