யார் இந்த நவல்பட்டு விஜி?
தொழிலதிபரான நவல்பட்டு விஜி, திருவெறும்பூர் தொகுதியில் உள்ள நவல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். தி.மு.க-வில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர். அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவராக இருந்தார்.
கலைஞர் காலத்தில் இருந்து, அவர் திருச்சிக்கு வரும்போதெல்லாம் பிரமாண்டமாக ஃபிளெக்ஸ், செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து கலைஞரையே வியக்க வைத்தவர்.
கடந்த, 2016-ம் வருட தேர்தலில் இவருக்குத்தான் கே.என்.நேரு திருவெறும்பூர் தொகுதியை வாங்கி தர முயற்சித்தார்.

“இவர்தான் வேட்பாளர்’ என்று நம்பி, களத்தில் வேலையை தொடங்கினார். இந்த நிலையில் தான் அன்பில் மகேஸ் உள்ளே புகுந்து வேட்பாளரானார். இதில், இருவருக்கும் இடையில் ஏகத்துக்கும் பகைமை வளர்ந்தது. இதனால், அவரது ஒன்றிய செயலாளர் பதவி பறிபோனது. இந்நிலையில், கே.என்.நேருவின் முக்கியத் தளகர்த்தராக தொடர்ந்தார்.
இன்னொருபக்கம், தொகுதியில் நடைபெறும் அனைத்து கோயில் திருவிழா, குடமுழுக்கு விழாக்களில் அன்னதானம் போடுவது, இளைஞர்கள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளுக்கு செலவழிப்பது என்று தொகுதியில் இளைஞர்கள் சக்தியை கவர்ந்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில்தான், ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற வகையில் அன்பில் மகேஸை போட்டுப் பார்க்க, அவருக்கு எதிரியான நவல்பட்டு விஜியை தங்கள் கட்சிக்கு இழுத்து, அவரை வேட்பாளராக்கியது த.வெ.க தலைமை.
அன்பில் மகேஸ் கடந்த 2016, 2021 ஆகிய இரு தேர்தல்களில் வென்றிருந்த நிலையில், இந்தமுறை வென்றால் ஹாட்ரிக் வெற்றிபெறலாம் என்று நினைத்தார். ஆனால், அவரை 9000-க்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் நவல்பட்டு விஜி வென்றிருக்கிறார்.!