சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தமிழிசை, தமிழக மக்களின் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக அண்ணன் ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் போகப் போகிறார் என்பதுதான் அது, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்து ஸ்டாலின் மிகப் பதட்டத்துடன் காணப்படுகிறார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அடி பணிந்து தானே நீங்கள் தடுக்காமல் இருந்தீர்கள். தில்லிக்கு அடி பணிந்து தானே மாநில சுயாட்சி குறித்து உங்கள் ஆட்சி இருந்தபோது பேசாமல் இருந்தீர்கள்.
நீங்கள் ஆட்சியில் இருந்தபோது தில்லிக்கு அடி பணிந்து கொண்டு தானே ஒற்றை வார்த்தை கூட பேசாமல் இருந்தீர்கள். 76-இல் கே.கே. ஷாவால் தான் இவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டது. இரண்டு முறை ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது திமுக ஆட்சிதான்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக அமித்ஷா பதில் அளித்து விட்டார். உங்களுக்கு புரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்.
நீட் வந்த உடனே முதல் கையெழுத்து போடுவோம் என்றீர்கள். அது உச்சநீதிமன்றத்தை மீறிய செயல் இல்லையா? நீங்கள்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி உள்ளீர்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.