நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள் :
2026-ஆம் ஆண்டு தொடங்கி இந்த முதல் நான்கு மாதங்களுக்குள்ளாகவே, நாடு முழுவதும் 2 லட்சம் தெரு நாய் கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சிறுவர்களும், முதியோர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தெரு நாய் கடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை நீதிமன்றம் உற்றுநோக்குகிறது.
உயர்தர பாதுகாப்பு உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களில்கூட நாய்கடி சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில்கூட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் சூரத் நகரில் தெரு நாய் கடிக்கு உள்ளாகியுள்ளார். நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் நாய் கடி சம்பவங்கள் நிகழ்வது அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியத்தைக் காட்டுகிறது.
விலங்குகள் நலவாரிய விதிமுறைகளை அரசுகள் உரிய முறையில் செயல்படுத்தவில்லை. கருத்தடை மற்றும் தடுப்பூசி விதிமுறைகளை முறையாகச் செயல்படுத்தாததே தற்போதைய நிலைக்குக் காரணம் என, நீதிபதிகள் சாடினர்.

நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க, முந்தைய உத்தரவுகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அடுக்கடுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
“பொதுவெளியில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து, உரிய தடுப்பூசி செலுத்தி, காப்பகங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும்.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் நல மையங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கேற்ப உரிய உள்கட்டமைப்புகளை உருவாக்கி, போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
மாநில அரசுகளுடன் தேசிய நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். நெடுஞ்சாலைகளில் நாய்கள் அலைந்து திரிவதைத் தடுக்கத் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் இந்தத் தீர்ப்பை உரிய முறையில் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்” என்றும், “இதில் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மாநில அரசுகள் இனிமேலாவது விழித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.