அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் மூன்றாம் இடத்திற்கு தள்ளபட்டிருக்கிறது.
த.வெ.க அலை ஒருபுறம் அடித்தாலும், அ.தி.மு.க-வில் புதுமுகம் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், மீண்டும் பழைய நபர்களுக்கே வாய்ப்பு கொடுத்தது பெரும் பின்னடைவாக மாறியது என்கின்றனர் அக்கட்சியினர்.
என்னதான் நடக்கிறது தேனி அ.தி.மு.க -வில்..?
இது குறித்து அ.தி.மு.க வட்டாரங்களில் பேசினோம். “ஆண்டிப்பட்டி தொகுதி அதிக கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. படப்பிடிப்பிற்காக எம்.ஜி.ஆர் வைகை அணைக்கு வரும்போதெல்லாம் அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் கூடும். தேனியில் தனக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை உணர்ந்ததாலேயே, 1984-ல் எம்.ஜி.ஆர் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது, ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு பிரசாரத்திற்கே செல்லாமல் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றார்

அவரின் மறைவிற்கு பிறகு வந்த 1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்று தோல்வியடைய, போடி தொகுதியில் நின்ற ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஜானகி, ஜெயலலிதா இருவரில் யார் எம்.ஜி.ஆருக்கு அடுத்து என்ற கேள்விக்கான பதிலை இந்த வெற்றி சுட்டிக் காட்டியதோடு, கட்சியும் கைகளுக்குள் வந்ததால், தேனி மாவட்டம் மீது ஜெயலலிதாவிற்கு ஒரு தனிபிரியம் ஏற்பட்டது.