மேகமலை வருஷநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்புப் பட்டியலில் வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய 98 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் வருவதால் அவர்களும் வெளியேற்றபடலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது.
இதற்கிடையில் மேகமலை ஊராட்சியில் உள்ள நொச்சி ஓடை பகுதியில் உள்ள பளியர் பழங்குடி மக்களின் பெயர்களும் ஆக்கிரமிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய பழங்குடியினர் செயற்பாட்டாளர் தன்ராஜ் , “ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தில் தேனி மாவட்டம் மேகமலை ஊராட்சியில் உள்ளது வனக்கிராமம் நொச்சிஓடை. தென்னிந்தியாவிலேயே உணவு சேகரித்து வாழும் பழங்குடி இன வகையைச் சார்ந்த பளியர் பழங்குடியின மக்கள் தொன்றுதொட்டு இந்த வனக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் வனத்திற்கும், இயற்கைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த எளிமையான குடிசைகளில் வாழ்பவர்கள். இவர்கள் காடுகளை நம்பியே வாழ்பவர்கள். காடுகளில் சிறுவன மகசூல் சேகரித்தும், தங்களுடைய கிராமங்களில் விவசாயம் செய்து வாழந்து வருகிறார்கள்.
வறுமையின் பிடியில் உள்ள இம்மக்கள் வாழ்வாதாரத்திற்காக மதுரை, விருதுநகர் மற்றும் கேரள வனப்பகுதிகள் வரை காடுகளுக்குள்ளேயே பயணிப்பவர்கள். நொச்சி ஓடையில் 29 குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில், வனத்துறையின் கெடுபிடிகளால தற்போது 22 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் ஏற்கனவே சட்டப்பூர்வமாக வன உரிமைப் பட்டா பெற்ற கர்ணன், முருகன் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட பழங்குடிகளின் பெயர்களும் அவர்களின் உறவினர்களும் இந்த ஆக்கிரமிப்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில்தான் வனத்துறையினரின் மனசாட்சியற்ற சட்ட விரோத செயல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.