திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அறிவித்து விட்டார் வைகோ. கூடவே வருங்காலங்களில் தவெக-வுடன் கூட்டணி சேர்ந்து அரசியல் செய்வோம் என்றும் சொல்லியிருக்கிறார்,
இந்தத் தருணத்தில் கட்சி பயணித்த கடந்த முப்பதாண்டுகளில் வைகோ எடுத்த பல முக்கிய முடிவுகளை ஒருமுறை திரும்பிப் பார்க்கலாமா?
முதல் கோணல்!
“கலைஞரின் போர்வாள்’ என்ற அடைமொழியுடன் வலம் வந்தவருக்கு திமுக-வில் பிரச்னை. 1994 ல் கட்சியிலிருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கினார். இளைஞர்கள் சிலர் வைகோவுக்காக தீக்குளித்தனர். எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பொன் முத்துராமலிங்கம் என திமுக-வின் முக்கியத் தளபதிகளாக இருந்த பலர், வைகோ பின்னால் சென்றார்கள். பிரமாண்டமாக கூட்டம் நடத்தினார். பத்திரிகைகள் ‘திமுக-வில் மீண்டுமொரு செங்குத்துப் பிளவு’ என எழுதின. ஆனால் அடுத்த இரண்டாவது ஆண்டு சட்டசபைத் தேர்தல் (1996) வந்தது. 91 – 96 வரையிலான ஜெ அரசின் மீது மக்கள் கடும் கோபத்திலிருந்தனர். திமுக – அதிமுக என தொடர்ந்து வந்த தேர்தல் வரலாற்றில் மூன்றாவது அணியாக சில சிறு கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு தனித்துக் களமிறங்கினார் வைகோ. அந்த முதல் முடிவே அவருக்குச் சாதகமாக அமையவில்லை. ஜெயலலிதா வேண்டாமென நினைத்த மக்கள் கலைஞரைத்தான் நம்பினார்களே தவிர வைகோவை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.