இதுவா ஜனநாயகம்?
ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதோ, அல்லது எதிர்க்கட்சியாக இருந்தபோதோ மக்களைத் திரும்பிப் பார்க்காதவர்கள், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன் மட்டும் `மக்கள் சேவகன்’ என்று காலில் விழ வருகிறார்கள். பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டால், அடுத்த ஐந்து வருடங்களுக்குக் கேள்விகேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற அகம்பாவம்தான் இந்த நூதனப் பட்டுவாடாக்களுக்குக் காரணம்.
இந்த க்யூ-ஆர் கோடுகளை உருவாக்குவதற்கும், கூப்பன்களை அச்சிடுவதற்கும், ஸ்வீட் பாக்ஸ்களைச் சப்ளை செய்வதற்கும், அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கும் இவர்கள் செலவழிக்கும் மூளையையும், நேரத்தையும், பணத்தையும் கொஞ்சமாவது மக்கள் நலனில் செலுத்தியிருந்தால் இதெல்லாம் தேவைப்பட்டிருக்காது.

ஐந்தாண்டுகள் நேர்மையாக உழைத்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியிருந்தால் தானாக ஓட்டு விழுந்திருக்கும்.
கூப்பன்களையும் டோக்கன்களையும் தரக் கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை விதித்தாலும் அந்தத் தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றத் துடிக்கும் அரசியல்வாதிகளே… `மக்களுக்கு நல்லது செய்தாலே போதும், அவர்கள் மனமுவந்து வாக்குகளை அளிப்பார்கள்’ என்கிற எளிய உண்மையை உணர்ந்துகொண்டால் இவ்வளவு கஷ்டம் இருக்காதுதானே!