மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது “தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு’ சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த தென் மண்டல கவுன்ஸிலின் துணைத் தலைவராக பங்கேற்றிருக்கிறார்.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் விஜய், ” பண்டைய துறைமுக நகரமான மகாபலிபுரத்திற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். நமது அரசியலமைப்பின் நீடித்த தொலைநோக்குப் பார்வையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்திற்காக இன்று நாம் இங்கு கூடியுள்ளோம்.

தென் மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி, நமது பிராந்தியத்தை தேசிய பொருளாதாரத்தின் முக்கிய இயந்திரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன. நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி, சேவை மற்றும் கண்டுபிடிப்புகளில் நாம் முன்னணியில் உள்ளோம். ‘வளர்ச்சியடைந்த இந்தியா’வை உருவாக்குவதற்கு நாம் கணிசமான பங்களிப்பை வழங்குவோம். அந்த எண்ணத்தின் அடிப்படையில், சில முன்னுரிமைகளை இந்த மன்றத்தின் முன் வைக்கிறேன்.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு
பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான இளம் தலைமுறையே நமது நாட்டின் எதிர்காலத்திற்கு அடித்தளமாகும். எனவே, சட்டவிரோத இணையவழி விற்பனை, அங்கீகரிக்கப்படாத விநியோகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் ஆகியவற்றின் மூலம் போதைப்பொருட்களும், கட்டுப்படுத்தப்பட்ட பிற பொருட்களும் இளைஞர்களுக்கு எளிதில் கிடைப்பதும், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தீவிர கவலைக்குரிய விஷயமாகும்.
ஆன்லைன் மூலம் வீரியமிக்க மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை முறைப்படுத்தும் சட்ட விதியை வலுப்படுத்தவும், அவற்றின் அங்கீகரிக்கப்படாத விற்பனைக்கு எதிராக கடுமையான அமலாக்கத்தை உறுதி செய்யவும், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கத் தேவையான சட்டங்களை மறுஆய்வு செய்யவும் இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.
அதே நேரத்தில், போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு மாநிலங்களுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, கடுமையான நடவடிக்கை மற்றும் போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல், விநியோகம் ஆகியவற்றில் ஈடுபடும் நெட்வொர்க்குகளுக்கு எதிராக இணைந்து செயல்படுவதன் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நாம் இணைந்து செயல்பட வேண்டும். ஒரு ஒருங்கிணைந்த பிராந்திய முயற்சி ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவது மட்டுமல்லாமல், ‘போதைப்பொருள் இல்லாத தென்னிந்தியா’ மற்றும் நமது இளைஞர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கவும் உதவும்.