தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. கருத்துக் கணிப்புகள் அத்தனையையும் பொய்யாக்கி தமிழக வெற்றிக் கழகம் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அதற்கடுத்தபடியாக அதிமுக இரண்டாமிடத்திலும் ஆளும் திமுக மூன்றாவது இடத்திலும் வந்துள்ளன.
திமுக பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பிடிப்பதே கஷ்டம் என்கிற சூழல் நிலவி வருகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக இருந்ததைப் போலவே இந்தச் சட்டசபையிலும் இருக்குமென தெரிகிறது.
ஆனால் அதிமுக வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு தேர்தலில் தோல்வி என்பது இது முதல் முறை.

கட்சி சந்தித்த முதல் தேர்தலான 1977, 80 மற்றும் 85 தேர்தல்களில் வென்ற கட்சி 89ல் தோல்வியடைந்தது. மீண்டும் 91ம் ஆண்டு வென்றது. மீண்டும் 96ல் தோல்வி. 2001ல் மீண்டும் வெற்றி.
2006ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த கட்சி 2011 மற்றும் 16 தேர்தல்களில் வென்றது. 21ல் தோல்வி.
இந்த நிலையில் தற்போது இரண்டாமிடம் பிடித்திருப்பதால் தொடர்ச்சியாக பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் பலமாக வீசிய விஜய் ஆதரவு அலையில் திமுகவே மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டதால் அதிமுகவுக்கு 70க்கும் மேற்ப்பட்ட தொகுதிகள் என்பது கௌரவமான தோல்விதான் என்றாலும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயலாளர் ஆன பிறகு தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாத சூழலே உருவாகி வருவது அதிமுக தொண்டர்களைச் சோர்வடையச் செய்யலாம்.
அவர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ எடப்பாடி பழனிசாமி?