அசாம் மாநிலம் ஜோர்ஹட் என்ற இடத்தை சேர்ந்த யஷ் தனுகா அகர்வால்(25) என்ற வாலிபர், தனது குடும்பத்தினரின் லாக்கரை உடைத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
யஷ் தனுகா அகர்வால் தான் திருடிய பணம் மற்றும் தங்க ஆபரணங்களை தனது காதலியுடன் ஆடம்பரமாக வாழவும், காதலிக்காகவும் செலவு செய்துள்ளார். கடந்த 11ஆம் தேதி அகர்வால் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியூர் சென்றிருந்த போது வீட்டில் இருந்த லாக்கரை திறந்து இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்தது. அகர்வால் தந்தையின் அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டது.
இது குறித்து அகர்வால் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சைபர் செக்யூரிட்டி பிரிவின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், இது வீட்டில் இருப்பவர்களின் வேலையாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு யஷ் அகர்வால் ஜோர்ஹட்டை விட்டு வெளியில் சென்று இருப்பதும் தெரிய வந்தது. யஷ் செல்போன் மூலம் போலீசார் அவர் அகமதாபாத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அகர்வால் தந்தை அகமதாபாத் சென்று தனது மகனை அழைத்து வந்து அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.