Business
-Vigneshkumar
வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் நேற்றிரவு வட்டி விகிதம் தொடர்பாகத் தனது முடிவை எடுத்தது. வட்டி விகிதத்தில் எந்தவொரு மாற்றும் செய்யப்படவில்லை. அதேநேரம் பணவீக்கம் காரணமாக இந்தாண்டு வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்பது போலத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது உலகப் பொருளாதாரம், குறிப்பாக இந்தியப் பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது ரிசர்வ் வங்கியைப் போலவே அமெரிக்க பெரடல் வங்கியும் அவ்வப்போது வட்டி விகிதம் தொடர்பான முடிவுகளை எடுக்கும். வளர்ச்சி, பணவீக்கம் என பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே அமெரிக்கா பெடரல் வங்கி இந்த முடிவை எடுக்கும். அதன்படி ஜூன் மாதத்திற்கான கூட்டம் கடந்த இரு நாட்கள் நடந்த நிலையில், நள்ளிரவில் வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

வட்டி விகிதம்
அமெரிக்க பெடரல் ரிசர்வ், தனது வட்டி விகிதத்தை 3.50% முதல் 3.75% என்ற அளவிலேயே மாற்றமில்லாமல் தொடர முடிவு செய்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காரணம்
அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் அதனால் உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள் ஆகும். இதற்கு முன்பு 2026ம் ஆண்டின் இறுதியில் பணவீக்கம் 2.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 3.6% ஆக உயரும் என பெடரல் ரிசர்வ் கணித்துள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரைப் பணவீக்கம் 2%க்குள் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழல் அந்த இலக்கை விட வெகு தொலைவில் உள்ளது.
தற்போது வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் உயருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பெடரல் ரிசர்வின் 18 அதிகாரிகளில், 9 பேர் இந்த ஆண்டிற்குள் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று கருதுகின்றனர். இதில் 6 அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளனர்.பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ், இனி வரும் காலங்களில் முன்கூட்டியே திட்டங்களை அறிவிக்காமல், அவ்வப்போது கிடைக்கும் பொருளாதாரத் தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய முதலீட்டாளர்கள்
அமெரிக்காவின் இந்த முடிவு இந்திய பங்குச்சந்தைக்குச் சாதகமானதாக இல்லை. ஏனென்றால் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்தால் அல்லது உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் உள்ள தங்கள் முதலீடுகளை எடுத்துக்கொண்டு, பாதுகாப்பான அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்வார்கள்.
முதலீடுகள் வெளியேறுவதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளது. 2026ல் ஏற்கனவே இந்திய ரூபாய் பலமுறை சரிவைச் சந்தித்துள்ளது. 2026-ம் ஆண்டில் இதுவரை நிஃப்டி ) 8% சரிவைக் கண்டுள்ளது. உலக அளவில் சந்தை மூலதனத்தில் இந்தியா ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலை மேலும் மோசமாகலாம்
தங்கம் விலை
வழக்கமாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை குறையும். ஏனெனில் தங்கம் வட்டி தராத ஒரு முதலீடு. அதேநேரம் மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைகிறது. இதனால் டாலர் மதிப்பு குறைந்து, தங்கம் விலையை உயர்த்துகிறது.
அதேநேரம் வட்டி விகிதம் குறைக்கப்படாதது தங்கத்திற்குச் சற்று அழுத்தத்தை கொடுத்தாலும், சர்வதேச பதற்றம் மற்றும் பணவீக்க உயர்வு காரணமாகத் தங்கம் விலை பெரிய அளவில் வீழ்ச்சியடையாமல் நிலையாகக் காணப்படுகிறது. ஒருவேளை எதிர்காலத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் தங்கத்தின் விலையில் கணிசமான சரிவு நிச்சயம் இருக்கும்.