India
oi-Vishnupriya R
அமராவதி: ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக 3 வயது குழந்தையை தவிக்கவிட்ட தம்பதியினர் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய். இவரது மனைவி சிரீஷா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நேற்று நள்ளிரவு சாயும், சிரீஷாவும் பைக்கை எடுத்துக் கொண்டு குழந்தையுடன் வெளியே சென்றனர்.

அப்போது கோதாவரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது அவர்கள் சென்றனர். பாலத்தின் நடுவே சென்றதும் சாய் திடீரென தனது பைக்கை நிறுத்தினார். பின்னர் கணவனும் மனைவியும் பைக்கிலிருந்து இறங்கினர். அந்த 3 வயது குழந்தையை பைக்கிலேயே அமர வைத்தனர்.
இதையடுத்து இருவரும் கைகளை கோர்த்துக் கொண்டு பாலத்தின் மேல் ஏறி கோதாவரி ஆற்றில் குதித்தனர். இது குறித்து குழந்தைக்கு தெரியாததால், அந்த குழந்தை அம்மா, அப்பாவை காணாமல் அழுது கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நள்ளிரவில் குழந்தை மட்டும் அழுவதை பார்த்து உடனே, போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும் ஸ்கூட்டரையும் பரிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சாய்- சீரிஷா தம்பதிக்கு கடன் சுமை இருந்ததாகவும் இதை அடைக்க முடியாமல் அவர்கள் சிரமப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடன் கொடுத்தவர்களும் இந்த தம்பதியை கடுமையான வார்த்தைகளால் பேசி காயப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் சாய்- சிரீஷா ஆகியோர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருப்பதால் தம்பதியை தேடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் தேடி வருகிறார்கள்.