தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா. கோவளத்திலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்குபவர், பின்னிரவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. நாமும் அதை செய்தியாக்கி இருந்தோம்.
இந்தச்சூழலில், அந்தச் சந்திப்பு கடைசி நிமிடத்தில் ரத்தானதாகச் சொல்கின்றன பா.ஜ.க வட்டாரங்கள். நேற்று நள்ளிரவு டெல்லியிலிருந்து வந்த ஃபோன்காலைத் தொடர்ந்து அமித் ஷா – எடப்பாடியின் சந்திப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “அ.தி.மு.க உட்கட்சி பிரச்னையைப் பேசி முடிக்கத்தான், எடப்பாடியை அந்த தனியார் ஹோட்டலுக்கு வரச் சொன்னார் அமித் ஷா. ஆனால், தன் கட்சியின் உள்விவகாரங்களில் டெல்லி தலையிட்டு பஞ்சாயத்து செய்வதை எடப்பாடி சுத்தமாக விரும்பவில்லை.
டெல்லிக்கும் தனக்கும் பாலமாக இருக்கும் ஒரு கட்டட தொழிலதிபரிடம், “கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்டேன். அதேபோல, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களிடம் இருந்து பறித்த கட்சிப் பொறுப்புகளையும் மீண்டும் அளிக்கும் எண்ணமில்லை. இதுதொடர்பாகப் பேசுவதாக இருந்தால், அப்படியொரு சந்திப்பே தேவையில்லை’ என்று கூறிவிட்டார்.