'நாங்க என்ன கருணாநிதியா… ஸ்டாலினா?' – சீறும் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் | பேட்டி

Spread the love

சட்டமன்றக் கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில, 17.06.2026 தேதியில் ஜூனியர் விகடன் இதழில் வெளியான அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டியின் ஒரு பகுதி இங்கே..

CTR  Nirmal Kumar - TVK
CTR Nirmal Kumar – TVK

முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து மின் துறை சார்ந்ததுதான். ஆனால், முன்னறிவிப்பற்ற மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனரே. மின்சார விநியோகத்தில் அப்படி என்னதான் சிக்கல்? 

நம்முடைய மின் துறை 15-20 ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. 2006 இல் தமிழகத்தின் ஒரு நாளைய மின் தேவை 6000-7000 மெகா வாட்டாகத்தான் இருந்தது. அப்போதே இந்த மின் துறையில் 1 லட்சத்துக்கும் மேட்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்தனர். ஆனால், இப்போது நம்முடைய மின் தேவை ஒரு நாளைக்கு 21000 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. இப்போது 69000 ஊழியர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். முதலில் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் திட்டத்தில் இருக்கிறோம். 15000 முதல் 20000 காலிப்பணியிங்களை உடனடியாக நிரப்பப் போகிறோம். அதேமாதிரி, தடையற்ற மின் விநியோகத்துக்கு துணை மின் நிலையங்களும், டிரான்ஸ்பார்மர்களும் ரொம்பவே முக்கியம்.

இரண்டுமே தமிழ்நாட்டில் மோசமாக இருக்கிறது. இருக்கிற நான்கரை லட்சம் டிரான்பார்மர்களில் இரண்டரை லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் 15-20 ஆண்டுகள் பழமையானவை. அதிகப்படியான மின் தேவை எழும் இரவு நேரங்களில் முறையான துணை மின் நிலையங்கள் இல்லாததால் டிரான்ஸ்பார்மர்கள் மீது அதிக லோடு ஏறி அவை பழுதாகிவிடுகின்றன. இதுதான் பல இடங்களில் இரவு நேர மின்வெட்டுக்கு காரணமாக இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நம்முடைய மின் தேவை என்னவாக இருக்கும் என்பதை மனதில் வைத்து அதற்கேற்ப கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களை தீட்டி வருகிறோம். சூரிய ஒளி மின்சக்தி பயன்பாட்டையும் முறைப்படுத்தவிருக்கிறோம். இடைத்தரகர்களுக்கு செல்லும் கமிஷன்களை தடுக்கப் போகிறோம். ஒட்டுமொத்தமாக மின் துறையை சீரமைக்க 30000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதற்கான நிதி ஆதாரங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சில இடங்களில் திமுகவின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே இடையூறும் செய்கின்றனர்.

மற்ற தொழிற்சங்கத்தினர் எங்கள் பக்கம் நிற்கின்றனர். மின் துறையில் நேர்மையாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு உள்ளிட்ட பலன்கள் எந்தத் தடையும் இல்லாமல் கிடைக்கும். அதேமாதிரி முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் துறைரீதியான நடவடிக்கையிலிருந்து தப்பவும் முடியாது.

விஜய் - சிடிஆர் நிர்மல் குமார்
விஜய் – சிடிஆர் நிர்மல் குமார்

அரசு நிர்வாகம் சார்ந்து முதல்வர் விஜய்யின் முக்கிய நோக்கம் என்னவாக இருக்கிறது?

கமிஷனும் கரப்ஷனும் இல்லாத தூய ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் ஒரே நோக்கம். அதைத்தான் அமைச்சர்களான எங்களையும் வலியுறுத்தியிருக்கிறார்.

தூய ஆட்சியை நடத்த வேண்டுமென கூறிவிட்டு அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்துக் கொள்கிறீர்களே. இது வட இந்தியாவில் பாஜக பின்பற்றிய வழிமுறையாயிற்றே?

திமுகவின் தயவில் ஆட்சியைப் பிடிக்கலாம் என எப்போது எடப்பாடி பழனிசாமி நினைத்தாரோ அப்போதே அவர் ஒரு அரை நூற்றாண்டு கட்சியை குழியில் தள்ளிவிட்டார். எடப்பாடியின் அதிமுகவுக்கு எதிர்காலமே கிடையாது. எதிர்க்கட்சியாகவும் அவர் உருப்படியாக செயல்படமாட்டார். தன்னுடைய இடத்தை காத்துக் கொள்வதற்காக அகங்காரத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அதிமுக இழந்தது அதிகம். உண்மையான அதிமுக தொண்டர்கள் அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். ஒரு லெட்டர்பேட் கட்சியைப் போல அதிமுகவை சுருக்கிவிட்டார். தொகுதி மக்களுக்கு நல்லதும் செய்ய முடியாமல், எதிர்க்கட்சி அரசியலும் செய்யாமல் எதற்காக அந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணமாக இருக்கிறது.

CTR Normal Kumar - TVK
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்

வெற்றிப் பெற்ற ஒரு தொகுதியில் ராஜினாமா செய்வது பெரும் வலியை கொடுக்கும். அதையும் தாங்கிக் கொண்டு ராஜினாமா செய்கிறார்கள் எனில் அதற்கு எடப்பாடி பழனிசாமியின் சுயநலம் மட்டும்தான் காரணம். எங்கள் கட்சிக்கு வந்த பிறகு யார் எந்த தவறு செய்யவும் எங்களின் தலைவர் அனுமதிக்கமாட்டார். அப்படி தவறு செய்பவர்கள் உடனடியாக தூக்கியெறிப்படுவார்கள்.

பெரும்பான்மை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த போது தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது என்கிற விமர்சனம் வலுவாக எழுந்ததே?

எங்கள் தலைவருக்கு எப்போதும் குறுக்கு வழியே பிடிக்காது. ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் வென்றிருக்கிறோம். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, கட்சியை உடைப்பது போன்ற கயமையான வேலைகள் எங்களுக்கு தெரியாது. பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் இன்னொரு தேர்தலை எதிர்கொள்ளவும் முதல்வர் விஜய் தயாராகத்தான் இருந்தார். அதனால் குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

திமுக தயவில்தான் தவெக அரசே ஓடிக் கொண்டிருக்கிறது என ஸ்டாலின் மேடைக்கு மேடை விமர்சிக்கிறாரே…

திமுகவே மக்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டு விட்டது. அவர்களுக்கே களத்தில் இடமில்லை. அப்படியிருக்க திமுக தயவில் ஆட்சி ஓடுகிறது எனப் பேசுவது பெரிய நகைச்சுவை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக, ஐ.யூ.எம்.எல் இல்லையென்றால் திமுக 10 இடங்களை கூட வென்றிருக்காது. அவர்களின் தயவால்தான் இப்போது எதோ குறைந்தபட்சமாக எதிர்க்கட்சியாகவாது அமர்ந்திருக்கிறார்கள். திமுகவிலிருந்து ஸ்டாலின் குடும்பம் வெளியேறி தொண்டர்களின் கையில் கட்சியை ஒப்படைத்தால்தான் அந்தக் கட்சி இனி உருப்படும்.

அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்

மத்திய அரசோடும் பாஜக-வோடும் இணக்கமான போக்கை கையாள நினைக்கிறீர்களோ?

எங்களின் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். அரசுரீதியாக தமிழகத்தின் உரிமைகளையும் மக்களின் விருப்பங்களையும் விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாள்வோம். தனிப்பட்ட எந்த உறவையும் வைத்துக் கொள்ளமாட்டோம். எங்களின் கொள்கை எதிரி பாஜக-தான். பாஜக-வை பற்றிய எங்களின் நிலைப்பாட்டை திடீர் திடீரென மாற்றிக் கொள்ள நாங்கள் ஒன்றும் கருணாநிதி, ஸ்டாலின் அல்ல

மகளிருக்கு 2500, கட்டணமில்லா பேருந்து என நிறைய நலத்திட்டங்களை அறிவித்தீர்களே… அதையெல்லாம் எப்போது நிறைவேற்றுவீர்கள்?

திமுக ஆட்சியமைத்து மூன்று ஆண்டுகள் கழித்துதான் மகளிருக்கு 1000 ரூபாய் கொடுத்தது. ஆதிதிராவிடர் நலத்துறை நிதியை எடுத்துதான் கடைசியாக 5000 ரூபாய் கொடுத்தார்கள். நாங்கள் அப்படியெல்லாம் ஏமாற்ற மாட்டோம். எல்லா துறை அதிகாரிகளோடும் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதைய நிதி நிலையை முழுமையாக மனதில் வைத்து நிதி ஆதாரத்தை திரட்டி விரைவில் மக்கள் விரும்பும் நலத்திடங்களை செயலாக்குவோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *