மத்தியப்பிரதேச மாநிலம், சிவபுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப் பயன்படுத்துவதில்லை. மே மற்றும் ஜூன் மாதங்களில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டி வதைக்கும் போதும், மக்கள் என்னிடம் நான் ஏசி பயன்படுத்தாது குறித்துக் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் “இது சம்பல் மண்ணின் தோல். எனக்கு வெப்பம் ஒரு பொருட்டல்ல’ எனப் பெருமையுடன் சொல்லுவேன். நான் பார்ப்பதற்கு இளைஞனாகத் தெரிந்தாலும், எனது ஆன்மா மிகவும் பழைமையானது. பழைய விஷயங்களை நாம் மறந்துவிடக் கூடாது. எப்போதும் உங்கள் சட்டைப் பையில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

அப்போது உங்களுக்கு எந்த ஆபத்தும் நேராது. இன்றைய காலத்தில் அனைவரும் நவீனப் பெட்டிகளைச் (செல்போன்) சுமந்து திரிகிறார்கள். ஆனால், இந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரோ வெங்காயத்தைச் சுமக்கிறேன். ஆயுர்வேதம் வளர்ச்சி கண்டு வரும் இந்தத் தற்காலச் சூழலில், இது போன்ற பாரம்பர்ய நடைமுறைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என்று அவர் வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாரம்பர்யத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார். ஆனால், பையில் வெங்காயம் வைத்திருப்பது வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் என்பது நவீன மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட தீர்வு கிடையாது.