Cricket
oi-Yogeshwaran Moorthi
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாட வாய்ப்பு இல்லை என்பதை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் சூசகமாக தெரிவித்துள்ளார். இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களை பேக் செய்வதன் மூலமாக, வீரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கவுள்ளது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த்யு 189 ரன்களை எடுத்தது. இதன்பின் தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை 2வது டி20 போட்டிக்கு இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனென்றால் சஞ்சு சாம்சன் கடைசியாக வெளிநாடுகளில் ஆடியுள்ள 10 இன்னிங்ஸில் 2 சதங்களை மட்டுமே அடித்துள்ளார். அதேபோல் 5 இன்னிங்ஸில் டக் அவுட்டாகி இருக்கிறார். இஷான் கிஷனும் மோசமான ஃபார்மில் ஆடி வருகிறார்.
இதனால் வைபவ் சூர்யவன்ஷியை டாப் ஆர்டரில் களமிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசுகையில், ஐசிசி நம்பர் 1 டி20 கிரிக்கெட் வீரராக அபிஷேக் சர்மா இருக்கிறார். அதற்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்க வேண்டும்.
டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றவர். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஒரு பயிற்சியாளராக நமது வீரர்கள் மீது நாம் தான் நம்பிக்கை வைக்க வேண்டும். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்புக்காக கதவுகளை தட்டிக் கொண்டு இருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறேன். நிச்சயமாக அவர் ஒரு சுவாரஸ்யமான திறமைமிக்க வீரர் தான்.
ஆனால் டாப் ஆர்டர் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய வீரர்களுக்கும் நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்று காட்ட வேண்டிய நேரமிது. நாங்கள் பேட்டிங் வரிசையில் எந்த வீரரையும் மாற்ற விரும்பவில்லை. இது வெறும் வைபவ் சூர்யவன்ஷியை சேர்த்து கொண்டு ஆடுவோம் என்று ஒரு நொடியில் எடுக்க வேண்டிய முடிவு கிடையாது.
டி20 உலகக்கோப்பை தொடரிலும், கடினமான நேரங்களிலும் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு நேரம் கொடுப்பதை போல்தான். இங்கிருந்து ஒரு அணியை உருவாக்க வேண்டும். எங்களின் டாப் ஆர்டர் இந்த மைதானங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை காண விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி நாளையும் களமிறங்க மாட்டார் என்று பார்க்கப்படுகிறது.