நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குணா மாயா போஹாரா தங்கியிருந்த முதியோர் பராமரிப்பு இல்லம் இடிந்து விழுந்தது. 97 வயதான குணா மாயா அந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்க நேபாள போலீஸாரும் ராணுவத்தினரும் களமிறங்கினர்.
வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பால் அந்தப் பகுதியே சேதமடைந்திருந்தது. சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குணா மாயாவை மீட்பது சவாலாக இருந்தது. இதற்கிடையே, காத்மாண்டுவிலிருந்து அவரது உறவினர் தீபக் போஹாராவும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் இணைந்தார்.

இடிபாடுகளுக்குள் தொடர்ந்து தேடிய நிலையில், குணா மாயா இன்னும் உயிருடன் இருப்பது தெரியவந்தது. சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மண் படிந்த ஆடைகளுடன் எக்ஸ்கவேட்டரின் வாளியில் அமர்ந்தபடி அவர் வெளியே கொண்டுவரப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.