International
oi-Halley Karthik
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. 700க்கும் அதிகமானோரை காணவில்லை. இந்நிலையில் இந்த வெள்ளத்திற்கு சீனா கட்டி வரும் அணைதான் காரணம் என்று குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. இந்த அணை குறித்து பல்வேறு அச்சங்கள் எழுந்திருக்கின்றன. அணை முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால், இந்தியாவுக்கு ஆபத்து என்று சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கும் சீனாவின் அணைதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீனா, “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தங்கள் நாட்டுப் பகுதியில் உள்ள அணை உடைந்ததே காரணம் என்ற தகவல்கள் போலியானவை. நேபாள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பனிச்சரிவை ஏற்படுத்தியது. பின்னர் மண் சரிவும் ஏற்பட்டது. இதுதான் இந்த வெள்ளத்திற்கு காரணம்.
தேவையில்லாமல் எங்கள் மீது குற்றம்சாட்டுவது எதற்கும் உதவாது. ஒத்துழைப்பு மட்டுமே உயிர்களை காக்கும். இது எதிர்பாராமல் நடந்த இயற்கை பேரிடர்” என்று நேபாளத்தில் உள்ள சீன தூதரகம் கூறியிருக்கிறது.
நேபாள வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்களும் அடித்து செல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக விளக்கியிருக்கின்றனர். நேபாளம் என்பது இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் நாடாளும். இமயமலையிலிருந்து உருகும் பனி பாறைகள், ஆறுகளாக நாட்டின் பல்வேறு பகுதியில் பாய்கிறது. இதில் முக்கியமான ஆறு ரசுவா மாவட்டத்தில் உள்ள போட் கோசியாகும்.
பனி பாறைகள் சீராக உருகி, ஆறாக பாய்கிறது எனில் பிரச்சனை இல்லை. ஆனால், புவி வெப்பமயமாதல் காரணமாக பனி பாறைகள் முன்பை விட இப்போது வேகமாக உருக தொடங்கியிருக்கின்றன. இப்படி உருவாகும் தண்ணீர், மலைகளில் ஏரிகளாக தேங்குகின்றன. இந்த ஏரிகள் பலவீனமானவை. பாறைகள், தளர்வான மண் மூலம் இந்த ஏரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் லேசான நிலநடுக்கம் காரணமாக பனிப்பாறைகள் பெரிய அளவில் உடைந்து ஏரியின் கரைகளை சேதப்படுத்தியிருக்கின்றன.
இதனால் ஏரிகள் உடைந்து பெரு வெள்ளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்த வெள்ளம் காரணமாக மக்கள் பலர் அதில் சிக்கிக்கொண்டனர். கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இன்று காலை உயிரிழப்பு எண்ணிக்கை 152 என இருந்த நிலையில், தற்போது 700க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன.