நேற்று (ஜூன் 17) ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 14 புள்ளிகளாக அமெரிக்கா வெளியிட்டுள்ளவை… (புள்ளிகள் எளிமையாக்கப்பட்டிருக்கிறது)
1. அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் கூட்டாளிகள் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை உடனடியாக நிறுத்தவும், இனி மோதலில் ஈடுபடாமல் லெபனானின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் இந்த ஒப்பந்தம் மூலம் உறுதியளிக்கப்படுகிறது.

2. அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் மதிக்க வேண்டும்; எந்தச் சூழலிலும் அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என ஒப்புக்கொள்ளப்படுகின்றன.
3. இரு நாடுகளும் அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால், இரு தரப்பு சம்மதத்துடன் இந்தக் கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
4. ஒப்பந்தத்திற்குப் பின் அமெரிக்கா தன் கடல் முற்றுகையை 30 நாள்களுக்குள் நீக்கும். இடைப்பட்ட காலத்தில் கப்பல் போக்குவரத்து நடக்கும். ஒப்பந்தம் முடிந்த 30 நாட்களுக்குள் எல்லையிலிருந்து அமெரிக்க படைகள் விலகும்.
5. பாரசீக வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் 60 நாட்களுக்குக் கட்டணமின்றி பாதுகாப்பாகச் செல்ல ஈரான் வழிவகை செய்யும். மேலும், ஹார்முஸ் நீர்ச்சந்தி நிர்வாகம் குறித்து ஓமனுடன் ஈரான் சர்வதேச விதிப்படி பேச்சுவார்த்தை நடத்தும்.
6. ஈரானின் பொருளாதார வளர்ச்சிக்கு 300 பில்லியன் டாலர் மதிப்பிலான கூட்டுத் திட்டத்தை அமெரிக்கா உருவாக்கும். இதற்கான வழிமுறைகள் 60 நாட்களுக்குள் முடிவாகி, தேவையான நிதிப் பரிவர்த்தனை அனுமதிகளை அமெரிக்கா வழங்கும்.
7. ஐ.நா மற்றும் அமெரிக்காவின் அனைத்து ஒருதலைப்பட்சத் தடைகளும் இறுதி ஒப்பந்தப்படி நீக்கப்படும். இந்தத் தடை நீக்க விவகாரம் மிகவும் முக்கியமானது என்பதால், உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் சம்மதிக்கின்றன.

8. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது. தன் செறிவூட்டப்பட்ட பொருட்களை ஐநா (IAEA) மேற்பார்வையில் தரம் குறைக்கும். ஈரானின் அணுசக்தித் தேவைகள் குறித்த திருப்திகரமான கட்டமைப்பு இறுதி ஒப்பந்தத்தில் பேசி முடிவெடுக்கப்படும்.
9. இறுதி ஒப்பந்தம் நடக்கும் வரை தற்போதைய நிலையே தொடரும். ஈரான் தன் அணுசக்தி திட்டத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்கும்; அமெரிக்கா புதிய தடைகளையோ அல்லது கூடுதல் படைகளையோ பிராந்தியத்தில் நிறுத்தாது.
10. ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி, அதற்கான வங்கி மற்றும் காப்பீட்டுச் சேவைகளுக்கு அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகத் தளர்வு உரிமங்களை வழங்கும்.
11. ஈரானின் முடக்கப்பட்ட நிதியை அமெரிக்கா உடனடியாக விடுவிக்கும். இந்த நிதியை ஈரான் மத்திய வங்கி குறிப்பிடும் பயனாளருக்கு எவ்வித தடையுமின்றி மாற்றுவதற்கான அனைத்து அனுமதிகளையும் அமெரிக்கா முழுமையாக வழங்கும்.

12. இந்த தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் இறுதி ஒப்பந்தம் ஆகியவற்றை இரு நாடுகளும் சரியாகச் செயல்படுத்துகின்றனவா என்பதைக் கண்காணிக்க ஒரு கூட்டுக் கண்காணிப்பு வழிமுறை உருவாக்கப்படும்.
13. இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட முக்கியப் பிரிவுகள் (1, 4, 5, 10, 11) முழுமையாகச் செயல்படத் தொடங்கிய பின்னரே, மீதமுள்ள இதர விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கும்.
14. இரு நாடுகளும் பேசி முடிக்கவிருக்கும் இறுதி ஒப்பந்தமானது, சர்வதேச அளவில் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UNSC) பிணைப்புக்குரிய அதிகாரப்பூர்வ தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்படும்.