பணம் கேட்டு மிரட்டுகிறார் ராம.ரவிக்குமார்.. எஸ்பி அலுவலகத்தில் மாஜி அறங்காவலர் பரபர புகார்! பின்னணி? | Complaint Against Rama Ravikumar Sparks Fresh Controversy in Dindigul

Spread the love

Tamilnadu

oi-Rajkumar R

திண்டுக்கல்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த இந்து தமிழர் கட்சியின் நிறுவனரும் தலைவருமான ராம.ரவிக்குமார் தனது கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பிரபல தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் திண்டுக்கல் எஸ்.பி.யிடம் பரபர புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் அபிராமி அம்மன், ஞானாம்பிகை உடனுறை காளகத்தீஸ்வரர் கோவில் முன்னாள் அறங்காவலரும் ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்த வீரக்குமார் என்பவர், புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,” நான் கடந்த 2023 ஆண்டு முதல் 2025 ஆண்டு வரை திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலின் டிரஸ்டியாக பணியாற்றி வந்தேன். பதவி வகித்த காலத்தில், கோவிலின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாகுபாடு இன்றி அறங்காவலர் குழு உறுப்பினருடன் இணைந்து நடத்திவந்துள்ளேன்.

Rama Ravikumar Dindigul

அபிராமி அம்மன் கோவில்

இந்நிலையில் இந்து தமிழர் கட்சியின் நிறுவனரும் தலைவர் ராம.ரவிக்குமார் தனது கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பிரபல தொழிலதிபர்களிடம் பணம் கேட்பதும், பணம் கொடுக்க அவர்கள் தவறும்பட்சத்தில் அவர்களை பற்றி சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிப்பதும் அதன்மூலம் காரியம் சாதித்துக்கொள்வதும் வழக்கமாகக் கொண்டவர். அதனடிப்படையில் என்னையும் சமூக வலைதளங்களில் தவறாக அவதூறு பரப்பிவருகின்றார்.

ஜாதி கலவரம்

அபிராமியம்மன் கோவிலில் நான் சிறப்புற செய்யும் சேவைகளை மையப்படுத்தி கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ” சீர்குலைத்து, அதன்மூலம் எனக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன், அவரது முகநூல் பக்கத்தில் பல்வேறு பதிவுகளில் என்னை ஒருமையில் பேசியும், வசூல் மன்னன், மக்களை ஏமாற்றி விற்க முயற்சி செய்கின்றார் என்றும், சட்டவிரோதமாக வசூலில் ஈடுபடும் கும்பல் என்றும், சமுதாயத்தில் என்மீது உள்ள மதிப்பிற்கும், மரியாதைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டு வருகின்றார். மக்களை தூண்டிவிட்டு ஜாதி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்துவருகின்றார்.

பரபரப்பு புகார்

மேலும் கோவில்விழாக்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு போலிப் புகார்களை கொடுத்தார். புகார் குறித்து போலீசார் விசாரித்து புகாரில் உண்மைதனமை இல்லை என்று சொல்லிவிட்டனர். பொய்யான குற்றச்சாட்டுகள் சொல்லி அவதூறு ஏற்படுத்தி, சமூகத்தில் எனது புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி எனது தொழிலை பாதிப்பை ஏற்படுத்தி விட்டார். அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகி, தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றேன். எனவே ராம, ரவிக்குமார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்க . மேலும் எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்

திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு முக்கிய காரணம் ராம.ரவிக்குமார். அவர்தான் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர். தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நில ஆக்கிரமிப்பு வழிபாட்டு முறைகள் ஆகியவை தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தவர் தான் மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார்.

ராம ரவிக்குமார்

அர்ச்சகர்களுக்கு தட்டில் காணிக்கை இடும் விவகாரம், கோவில் சொத்து மீட்பு, ஆகம விதிகள் மீறப்பட்டதாக வழக்கு, சிலைகள் மாயமான வழக்கு என பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறார். இந்து தமிழர் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இதற்கு முன்னதாக இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் தான் ராம ரவிக்குமார். இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *