மேஷ ராசியினருக்கு மேற்சொன்ன மூன்று கிரகங்கள் பலமான நிலையில் சஞ்சரிக்கும்போது, திடீர் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறரை வேலை வாங்கும் தகுதி ஏற்படும். ஆனால், இந்த ராசிக் காரர்களுக்குப் புதன், சுக்கிரன், சனி ஆகியோரால் கெடு பலன்கள் உண்டாகும்.
இந்தக் கிரகங்களின் ஆட்சிக் காலங்களில் (தசை, புக்தி, அந்தரம்) எச்சரிக்கையாக இருப்பதுடன், குறிப்பிட்ட காலங்களில் கிரகச் சாந்தி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. பழநிக்குச் சென்று தண்டாயுதபாணியை வழிபடுவதும், ஏழைகளின் கல்விக்கு உதவுவதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்குச் சூரியன், புதன், சனி ஆகியோர் யோக பலன்களைத் தரக்கூடியவர்கள். சனி முழு முதல் யோக காரகன் ஆவார். இவர் வலுத்திருந்தால், சகல யோகங்களையும் பெறமுடியும். சனியும் புதனும் இணைந்திருப்பது அதிர்ஷ்ட வாய்ப்புக்களைத் தரும்.
சூரியன் 4 எனும் கேந்திரத்துக்கு மட்டும் அதிபதி என்பதால், இவர் லக்னாதிபதிக்கு பகை கிரகம் என்றாலும் சொத்து, சுகங்களை வழங்குவார். இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோரால் கெடு பலன்கள் ஏற்படும். குறிப்பிட்ட கிரகங்களின் ஆட்சிக் காலங்களில் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது அவசியமாகும். சிவ வழிபாடு நன்மை அளிக்கும்.
மிதுனம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புதன், சுக்கிரன் ஆகியோரால் யோக பலன்கள் கிடைக்கும். இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது சிறப்பு. ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பாளை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும். மேலும், சூரியன், செவ்வாய், குரு ஆகியோரால் கெடுபலன்கள் உண்டாகும். குறிப்பிட்ட கிரகங்களின் ஆட்சிக் காலங்களில் கிரகச் சாந்தி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.
கடகம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், குரு, சந்திரன் ஆகியோரால் யோக பலன்கள் சித்திக்கும். இவர்களில் செவ்வாய் வலுத்திருந்தால் விசேஷ பலன்கள் நிச்சயம். சுப வீடுகளில் இந்த மூவரின் இணைவு மற்றும் பார்வை மூலம் நலம் பெருகும்.
புதன், சுக்கிரன், சனி ஆகியோரால் கடக ராசிக்காரர்களுக்குக் கெடு பலன்கள் ஏற்படலாம். குறிப்பிட்ட இந்தக் கிரகங்களின் தசை, புக்தி, அந்தர காலங்களில், குறிப்பிட்ட கிரகங்களுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்துகொள்வது அவசியம். மகாலட்சுமி மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவதால், கெடு பலன்கள் குறையும்.