கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வேலைக்கு வரும்போது தங்கள் கையில் உள்ள ரொக்கப் பணம் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட துறையினர் திடீரென ரெய்டு நடத்தினால் அதிகாரிகள் எவ்வளவு பணம் கொண்டு வந்தார்கள், அந்த சமயத்தில் அவர்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பது போன்றவைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் லஞ்சம் வாங்குவது குறையும் என்ற கருத்து எழுந்துள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அலுவலக நடைமுறையின்படி அரசு துறைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்க பணத்தை “Personal Cash Register” – இல் பதிவு செய்து அலுவலகத் தலைவரின் கையொப்பம் பெற்று எல்லா வேலை நாட்களிலும் பராமரிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான அலுவலகங்களில் இப்பதிவேடானது தொடர் பராமரிப்பில் இல்லாமலும், இப்பதிவேடு பராமரிக்கப்படும் அலுவலகங்களில் சரியாக முறைப்படுத்தப்படாமலே பெயரளவில் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இப்பதிவேட்டினை முறையாக பராமரிக்க வழிகாட்டு நெறிமுறைகள் கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்க பணத்தை பதிவு செய்யும் விதமாக அனைத்து அலுவலகங்களிலும் பிரத்யேகமான பர்சனல் கேஷ் ரெஜிஸ்டர் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
இப்பதிவேடானது கண்டிப்பாக வருகைப்பதிவேட்டுடன் அலுவலகத் தலைவரின் ஒப்புதல் பெற்று சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். இப்பதிவேட்டினை அலுவலக தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை ஆய்வு மேற்கொண்டு இப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.