மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்ட பிறகு அக்கட்சியில் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அக்கட்சியை சேர்ந்த 80 எம்.எல்.ஏ.க்களில் 60க்கும் மேற்பட்டோர் அதிருப்தி எம்.எல்.ஏ.ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் கைகோர்த்துள்ளனர். இப்போது சபாநாயகர் ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்து விட்டார். அடுத்த கட்டமாக இப்போது எம்.பி.க்களும் மம்தா பானர்ஜியை கைவிட தொடங்கி இருக்கின்றனர். மம்தா பானர்ஜிக்கு எதிராக திரும்பி இருக்கும் அதிருப்தி எம்.பி.க்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
எம்.பி.க்கள் ககோலி, சதாப்தி, சயோனி, மாலா, பாபி ஹல்தார், பார்த்தா பௌமிக், அசித் குமார் மால், யூசுப் பதான், கலீலுர் ரஹ்மான், அபு தாஹெர் கான், மிதாலி பாக், கலிபடா சோரன், ஷர்மிளா சர்க்கார், ரச்னா பாஸ்த் பானர்ஜி, சக்ரானிஷ் பானர்ஜி, சக்ரான் பானர்ஜி. அதிகாரி (தேவ்), ஜூன் மாலியா மற்றும் பிரசூன் பானர்ஜி ஆகியோர் அதிருப்தி அணிக்கு சென்றுள்ளனர்.

நடிகர் சத்ருகன் சின்ஹாவின் பெயரும் அதிருப்தியாளர்கள் பட்டியலில் இருந்தது. ஆனால் தான் கையெழுத்து போடவில்லை என்று சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ராஜ்ய சபையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த சுஷ்மிதா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா சர்மாவை சந்தித்து பேசி இருக்கிறார். அவர் பாஜகவில் இணைந்ததாக வெளியான செய்திகள் குறித்து செய்தியாளர்கள்கேட்டபோது, “நான் ஒரு முடிவை எடுத்ததும் உங்களுக்குத் தெரிவிப்பேன். தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்தேன். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணம் செய்யும் நிலையில் இருக்க நான் விரும்பவில்லை. அது சரியான அணுகுமுறையும் அல்ல. எனது அரசியல் எதிர்காலம் அசாமில்தான் உள்ளது.
வங்காளத்திற்கு அப்பால் உள்ள மாநிலங்களுக்கான அரசியல் முன்னெடுப்பு அல்லது தொலைநோக்குத் திட்டம் திரிணாமுல் காங்கிரஸிடம் இல்லை. குறிப்பாகத் தற்போதைய சூழலில் அது இன்னும் அதிகமாகவே இல்லை” எனத் தெரிவித்தார். ஏற்கனவே மற்றொரு திரிணாமுல் ராஜ்ய சபை உறுப்பினர் சுகேந்து சேகர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
எப்போதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் மிகவும் விசுவாசியாக இருந்த சயோனி கோஷ், மற்றொரு மம்தா பானர்ஜியின் மிகவும் நெருங்கிய விசுவாசி மாலா ராய் மற்றும் மூன்று முஸ்லீம் எம்.பி.க்களும் அதிருப்தி அணிக்கு ஆதரவளித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸில் பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராகவே அதிகமான நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருந்தனர்.
எனவே அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக சமீபத்தில் சாயோனி மற்றும் மாலா ஆகிய இருவரையும் கட்சி நிர்வாகிகளாக மம்தா பானர்ஜி நியமித்து இருந்தார். ஆனால் அவர்களும் மம்தாவிற்கு துரோகம் செய்ய துணிந்துவிட்டனர். அதிருப்தி அணியை சேர்ந்த எம்பி சதாப்தி ராய் இது குறித்து கூறுகையில், ” எங்களது அணிக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்கள் பட்டியலில் சயோனி கையெழுத்திட்டாரா (சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில்) என்பது எனக்குத் தெரியாது, ஆனால் மற்றவர்கள் செய்தார்கள்.” என்றார்.

சயோனி இந்த பிரச்சினையில் எதுவும் பேசவில்லை. அதிருப்தி திரிணாமூல் எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் கட்சிக்கு உரிமை கோர ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பிரிந்து சென்ற சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் பிரிவுகள் கையாண்ட தந்திரத்தை பின்பற்றி அதிருப்தி எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் கட்சிக்கு உரிமை கோர திட்டமிட்டுள்ளனர்.
சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் வழியில் கட்சியை ஆரம்பித்தவர்களை ஓரங்கட்டிவிட்டு இப்போது அதனை வேறு நபர்கள் கைப்பற்றி பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். அதேமுறையை திரிணாமுல் அதிருப்தியாளர்களும் கடைப்பிடிக்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.!