தையல் வேலை செய்வதால் கர்ப்பப்பையில் பிரச்னைகள் வரும் என நினைத்து பயப்படத் தேவையில்லை. 50 ப்ளஸ் வயதில் உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கத்தின் காரணமாகவும் அடிவயிற்று வலி வரலாம். சிலருக்கு சிறுநீர்ப்பாதை தொற்றும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். கர்ப்பப்பையில் உள்ள ஃபைப்ராய்டு கட்டிகள் அல்லது சினைப்பை கட்டிகள் காரணமாகவும் அடி வயிற்றில் வலி வரலாம். மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களாலும் சிலருக்கு இப்படி வலி வரலாம். இடுப்பெலும்பு, மூட்டு மற்றும் தசை வலிகளின் காரணமாகவும் இருக்கலாம்.
குடல் சார்ந்த பிரச்னைகள், மலச்சிக்கல், சரியாக செரிமானமாகாதது போன்ற பல காரணங்களால் அடி வயிற்றில் வலி வரலாம்.

வலி அதிகரித்துக்கொண்டே இருந்தாலோ, தொடர்ச்சியாக இருந்தாலோ, வெள்ளைப்படுதல் இருந்தாலோ, ரத்தப் போக்கு இருந்தாலோ, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தாலோ, உடல் எடை குறைந்தாலோ, கூடினாலோ, வயிறு மிகவும் வீக்கமாகத் தெரிந்தாலோ, நடக்கும்போதோ, எடை தூக்கும்போதோ அதிகமாக வலித்தாலோ… நீங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். பெல்விக் எக்ஸாம் எனப்படும் இடுப்பெலும்புப் பகுதிக்கான சோதனை, ஸ்கேன் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் தேவைப்படும். இந்தப் பரிசோதனைகளின் மூலம், வலிக்கான காரணம் தெரியும். சாதாரண தசைப் பிடிப்பா அல்லது வேறு காரணங்களா எனத் தெரிந்து சரியான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார். வேலை முறையில் சில மாற்றங்களைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.
உதாரணத்துக்கு, ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கொரு முறையும் எழுந்து நடக்கலாம். முதுகுப் பகுதிக்கு சரியான சப்போர்ட் உள்ளபடி உட்கார வேண்டும். தொடர்ந்து நீண்ட நேரம் தையல் மெஷினை மிதிக்காமல், இடையிடையே சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். இடுப்பெலும்புத் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.