Tamilnadu
oi-Vishnupriya R
சென்னை: வியட்நாம் படகு விபத்தில் பலியான பழனியை சேர்ந்த முருகபிரபு என்பவர் இறப்பதற்கு முன்னர், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ஸில் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்ததாக அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
வியட்நாம் படகு விபத்தில் பலியான 10 தமிழர்களில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகபிரபு என்பவர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

43 வயதாகும் முருகபிரபு, பழனியை அடுத்த சிவகிரிப்பட்டியை சேர்ந்தவர். இவர் லாவா செல்போன் டீலராக உள்ளார். இவரும் நிர்மல்குமார் என்பவர் இணைந்து பார்ட்னர்ஷிப் அடிப்படையில் இந்த தொழிலை செய்து வந்தனர்.
இதுகுறித்து முருகபிரபுவின் உறவினர்கள் கூறுகையில், லாவா நிறுவனத்தில் அதிக விற்பனை செய்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக வியத்நாமும் இலவச சுற்றுலா அனுப்பி வைத்தனர்.
அதில்தான் முருகபிரபு, அவரது நண்பர் நிர்மல் குமாருடன் சென்றார். படகில் செல்வதற்கு முன்பு அவர் சுற்றி பார்த்த புகைப்படங்களை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களாக வைத்திருந்தார்.
இந்த சுற்றுலாவை முடித்துக் கொண்டு திங்கள்கிழமை பழனிக்கு வந்துவிடுவதாக சொல்லியிருந்தார். ஆனால் தற்போது இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதே. எப்படியாவது அவரது உடலை தமிழகத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
முருகபிரபு லாவா செல்போன் டீலராக பழனி, உடுமலைபேட்டையில் இருந்து வந்தார். அவருக்கு மகாலட்சுமி (35) என்ற மனைவியும் சர்விகா (8) என்ற மகளும் உள்ளனர். சர்விகா பழனியில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறாராம்.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள லாவா செல்போன் டீலர்கள் கம்பெனி செலவில் வியட்நாமுக்கு சுற்றுலா அனுப்பி வைத்தனர்.
அவர்கள் இன்று காலை 11 மணிக்கு ஃபூ குவோக் தீவிற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது படகு திடீரென பழுதாகி நின்றது. அந்த நேரம் பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தமிழர்கள், ஆந்திரா, கேரளா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 பேர் பலியாகிவிட்டனர். பலியானவர்களில் 10 பேர் தமிழர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் குமார், முருக பிரபு, ஸ்ரீதர், ஷேக் அப்துல்லா, பாலாஜி, வினய்குமார், ரவிசங்கர், சந்தோஷ்குமார், பாபு, அழகுராஜ் ஆகிய 10 பேர் பலியாகிவிட்டனர். அது போல் ஆந்திராவை சேர்ந்த நல்லபேட்டை ஆதிசேஷைய்யா, ஸ்ரீதர் (மற்றொருவர்), ஜெயலட்சுமி ஆகிய மூவரும், கேரளாவை சேர்ந்த அவிகாட் செரியன், லோவேனி ஆகிய இருவரும் பலியாகிவிட்டனர்.
லாவா மொபைல் விற்பனையை அதிகரித்து கம்பெனிக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்ததை ஊக்குவிக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்ட இன்பச் சுற்றுலா இப்படி சோகமாக முடிந்துவிட்டதே!