பழனியில் ரூ 100 கோடி நில மோசடி! கோயில் சொத்துகள் எல்லாம் பத்திரமா இருக்கா? ரமேஷ் எடுத்த அதிரடி | Palani Land Scam: Minister orders for comprehensive audit in temple

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்ய புதிய குழு ஒன்றை இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திரு கோயில் சொத்துக்களை பாதுகாக்க மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் அதிரடி திட்டத்தை தீட்டியுள்ளார்.

palani tamil nadu

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் சீர்மிகு நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷின் வழிக்காட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக் குழு பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது.

இந்த குழு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து, கணக்கில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள், சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்ட விரோத பெயர் மாற்றங்கள் போன்றவை நடந்துள்ளதா என முழுமையாக அறிக்கை தயார் செய்து விரைவாக அளித்திட அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இக்குழுவிற்கு திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் தலைவராகவும், திருக்கோயில் இணை ஆணையர், பழனி வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் துணை ஆட்சியர், உதவி இயக்குநர் (நில அளவை), தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.

பழனி திருக்கோயில் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து கோயில் சொத்துக்களை பாதுகாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இது அமையவிருக்கிறது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் இதே போல் குழு அமைத்து ஆய்வு செய்ய மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழனி கோயிலுக்கு பக்தர் ஒருவர் 1888-ஆம் ஆண்டு தண்டாயுதபாணி மடத்திற்கு 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் கொடுக்கப்பட்டது. கடந்த 1999ஆம் ஆண்டு முதல் மடத்தின் நிர்வாகத்தில் உரிமைக் கொண்டாடும் சிலர் இந்த நிலத்தை வெளியாட்களுக்கு விற்க முயற்சித்து வந்தநர்.

அறநிலையத் துறையின் தலையீட்டால் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதி இந்த நிலம் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமானது என கூறி தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கான பத்திர பதிவான போது இந்த பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.

ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த பத்திரப்பதிவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக சார் பதிவாளர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் நில மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்கள்.

இந்த மோசடியில் தவெக அமைச்சர் ரமேஷின் உறவினருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்னதும் 3 பேர் புகாரின் பேரில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். தவெக அரசு பொறுப்பேற்றதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது பழனி நில மோசடி விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *