ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் யோகேஷ் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளி வளாகத்திற்குள் மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்தினால் தான் யோகேஷ் உயிரிழந்ததாக அவரின் உறவினர்களும் உள்ளுர் மக்களும் நேற்று மாலை அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். முதல்கட்டமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அலட்சியமாக செயல்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில், உடலை வாங்க ஒப்புக் கொண்டனர். இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ” இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக விசாரிக்க இரண்டு தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது” என்றார்.