Cricket
oi-Yogeshwaran Moorthi
லண்டன்: ஐபிஎல் தொடர்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் மற்றும் சிறிய பவுண்டரி எல்லையில் விளையாடிவிட்டு, இங்கிலாந்து பிட்சில் விளையாடுவது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதை போல் இருப்பதாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். இது இந்திய அணி பேட்ஸ்மேன்களை கிண்டல் செய்வதை போல் அமைந்திருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஐபிஎல் தொடரில் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளிய இந்திய அணி வீரர்கள், இங்கிலாந்து பிட்சில் கொஞ்சம் கூட போராடமல் அடங்கிவிட்டனர். ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், திலக் வர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களும் எளிதாக விக்கெட்டை பறிகொடுப்பதை வாடிக்கையாக்கி வருகின்றனர்.

குறிப்பாக இங்கிலாந்து பிட்சில் ஆர்ச்சர் வீசும் 145+ பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது இந்திய ரசிகர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் பேசுகையில், இங்கிலாந்து பிட்ச்களில் விளையாடுவது இயல்பு நிலைக்கு திரும்பியதை போல் உள்ளது.
இங்கிலாந்து பிட்ச்களில் பெரிதாக எதுவும் செய்ய தேவையில்லை. சரியான லெந்தில் பந்தை நேராக வீசினாலே போதும். ஆஅனால் ஐபிஎல் தொடரில் பிட்சில் எந்த பேஸ், ஸ்விங்கும் இருக்காது. பவுண்டரி எல்லைகளும் சிறியது. அதனால் அங்கு பந்துவீசுவதற்கு துல்லியம் மிகவும் அவசியம். சிறிய தவறு செய்தாலே, பந்து சிக்சருக்கு பறந்துவிடும்.
இங்கிலாந்து மண்ணில் 200 ரன்கள் கூட பாதுகாப்பான ஸ்கோர் கிடையாது. எப்போதுமே 200 ரன்கள் போதாது என்றே நினைப்பேன். ஆனால் 200 ரன்களை சேஸ் செய்ய வேண்டுமென்றால், நிச்சயமாக ஸ்பெஷல் இன்னிங்ஸ் விளையாடப்பட வேண்டும். அப்படியான சூழலில் இங்கிலாந்து பவுலர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய பிட்ச் மற்றும் இங்கிலாந்து பிட்ச் ஆகிய இரண்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய டி20 அணியில் அனுபவ பேட்ஸ்மேன்கள் மற்றும் அனுபவ பவுலர்கள் சிலரையாவது சேர்க்க வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.