இந்த குண்டுவெடிப்பின் தீவிரம்
சுமார் 25 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. அதன் அருகில் இருந்த ஒரு கட்டடமும் கடுமையாக பாதிக்கப்பட்டது; அதன் ஜன்னல்கள் உடைந்து சிதறி, சுவர்கள் இடிந்து விழுந்தன.
இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றுள்ளது. இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. “எங்கள் தற்கொலைப்படையான மஜீத் பிரிகேட், குவெட்டா கண்டோன்மென்ட்டில் இருந்து ஆக்கிரமிப்புப் படையினரை ஏற்றிச் சென்ற ரயில் மீது இன்று காலை வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியது.
இந்த நடவடிக்கைக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் முழுப் பொறுப்பேற்கிறது,” என்று BLA வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாகப் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், பல தசாப்தங்களாகப் பிரிவினைவாதப் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. இனவாத பலூச் பிரிவினைவாதிகள், அதிக சுயாட்சி மற்றும் இயற்கை வளங்களில் அதிக பங்கைக் கோரிப் போராடி வருகின்றனர். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் போன்ற குழுக்கள், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் மற்றும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்கள் (CPEC) மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.