முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி சந்தித்து நலம் விசாரித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே சிறைச்சாலைகளைச் சந்தித்த இயக்கம் என்பதால், கழகத்தைச் சேர்ந்த மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை ஒரு பெருமையாகவே ஏற்றுக்கொண்டு சிறையில் இருக்கிறார்.
தி.மு.க-வும் அதன் தலைவர்களும் எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அச்சுறுத்தல்களுக்குப் பயப்படாமல் அதைச் சந்திக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுப் போய் உள்ளது. நாள்தோறும் பெண்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராகவும் கொடூரக் குற்றங்களும் கொலைகளும் நடந்து வருகின்றன. முன்னதாக அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களும் வழக்குகளும் போடப்பட்டு கைது செய்ய முயற்சி செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகள், யூடியூபர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை சிறைக்கு அனுப்பவே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. தவெக அரசுக்கு ஜனநாயகத்தின் மீது சிறிதும் நம்பிக்கையோ, மக்கள் மீது அக்கறையோ இல்லை என்பதையே இது காட்டுகிறது.
முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் அன்றைய முதலமைச்சர் தளபதி அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதும், தி.மு.க இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. தவெக அரசிடம் தம்மை விமர்சிப்பவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. அவர்கள் யாருக்குப் பயந்து அரசியல் செய்கிறார்களோ, அதே வழியில்தான் ஆட்சியையும் நடத்துகிறார்கள்.
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தெருக்குறள் அறிவு கைது செய்யப்பட்ட சம்பவம் இதற்கு ஒரு சான்றாகும். பா.ஜ.க என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்கும் இந்த அரசு, டெல்லியில் மாணவர்கள் போராட்டம் எவ்வாறு கையாளப்படுகிறதோ, அதேபோலவே இங்கேயும் போராட்டங்களை அடக்குமுறையுடன் கையாண்டு வருகிறது.

திமுக தன்னுடைய கொள்கைகளிலிருந்தும், தமிழ்நாட்டின் நலனிலிருந்தும் என்றும் பின்வாங்கியதும் இல்லை, விட்டுக்கொடுத்ததும் இல்லை. மசோதாக்கள் தொடர்பான விஷயங்களில் தி.மு.க தனது தெளிவான கருத்துகளைப் பதிவு செய்துள்ளது.
வரலாற்றில் எந்தக் காலத்திலும் அ.தி.மு.க-வும் தி.முக.வு.ம் நெருங்கி வந்ததில்லை. ஆனால், நதிநீர் உரிமை போன்ற தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்காகப் போராடும்போது, அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும் என்பதே தி.மு.க-வின் தொடர்ச்சியான நிலைப்பாடு.
மேலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தி.மு.க, நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவி போராட்டத்தை ஒடுக்கிய நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.