Tamilnadu
oi-Vignesh Selvaraj
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் கனமழையில் நனைந்து சேதமடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள், பட்டீஸ்வரம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இவை அரவைக்கு அனுப்பாமல் பல மாதங்களாக திறந்தவெளியில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தார் பாய்கள் கிழிந்ததாலும், நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததாலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழை மற்றும் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால், சுமார் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள் நனைந்தன.
கனமழை காரணமாக இந்த சேமிப்புக்கிடங்கு முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் ஏற்கனவே சேதமடைந்திருந்த நெல் மூட்டைகளுடன், மேலும் பல மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளன. மொத்தமாக வீணாகி இருக்கும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கை 1 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
30 ஆயிரம் டன் அளவுக்கு சேமிக்ககூடிய இந்த கிடங்கில் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்காமல் பல மாதங்களாக அப்படியே வைக்கப்பட்டுள்ளன. பல சாக்கு மூட்டைகள் கிழிந்து நெல் மணிகள் வெளியே கொட்டிக் கிடக்கின்றன. மழையில் நனைந்த நெல் மணிகள் முளைப்பு விட்ட நிலையில் உள்ளன. நெல் மணிகள் முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பாமல், பல மாதங்களாக ஒரே இடத்தில் அலட்சியமாகத் தேக்கி வைத்ததே இந்த பெருமளவு இழப்பிற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மழையில் நனைந்த நெல் மூட்டைகளை உடனடியாக உலர வைக்கவோ அல்லது நவீன உலர் கலன்களுக்கு மாற்றவோ தவறினால், நெல் மணிகள் அனைத்தும் முளைக்கத் தொடங்கி முற்றிலும் வீணாகிவிடும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனிடையே நெல் மணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.