இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ம.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், “மருத்துவர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையேயான பிரச்னைக்கு முக்கிய காரணி சௌமியாதான் என்பது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மகளையும் சிறப்பாக `கவனிக்க’ நினைத்தார் ராமதாஸ்.
ஆனால் அந்த முயற்சிக்கு தடை விதித்துவிட்டார் சௌமியா. இருவருக்குமான மோதலின் துவக்கப்புள்ளி அதுதான். அதனால்தான் முகுந்தனையும், ஸ்ரீகாந்தியையும் கட்சிக்குள் இழுத்து வந்தார் ராமதாஸ்.
அப்படி இருந்தும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர் உறவினர்கள். அன்புமணியும் அந்த முயற்சியை பாசிட்டிவாக முடிக்க நினைத்தார். ஆனால், `கரை ஒதுங்கிய கப்பலில் ஏன் ஏற வேண்டும்?’ என்று அதையும் தவிர்த்தது சௌமியா தரப்பு. அதன்பிறகுதான் சசிகலாவுடன் கூட்டணி வைத்தார் ராமதாஸ்.

இந்தத் தேர்தல் முடிவுகள்தான் ராமதாஸ் – அன்புமணி இருவரையும் யோசிக்க வைத்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜி.கே.மணியும், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ அருளும் தைலாபுரத்தை எட்டிக்கூடப் பார்க்காததால் நொந்துபோயிருந்தார் ராமதாஸ்.
அதேபோல, கூடுதல் எம்.எல்.ஏக்களைப் பெற்றிருந்தால் அமைச்சரவைக்குள் சென்றிருக்கலாம் என்று நினைத்தார் அன்புமணி. அதன்பிறகுதான் இணைவது குறித்து உறவினர்களிடம் பேசியிருக்கிறார் அன்புமணி. அதனடிப்படையில்தான், தோட்டத்திற்கு வந்தார் அன்புமணி.
அதேசமயம் அதுகுறித்து முன்பே தகவல் கூறியிருந்தும், அன்புமணியையும், அவரது குடும்பத்தினரையும் புறக்கணித்தார் ஸ்ரீகாந்தி. அன்புமணி அங்கிருந்து சென்றபிறகு வந்த ஸ்ரீகாந்தியிடம், `அனைத்தையும் நான் சரி செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் ராமதாஸ். அதற்கு, `நீங்க எல்லோரும் ஒன்னா நல்லா இருங்க அதுபோதும்’ என்று இறுகிய முகத்துடன் சென்றுவிட்டார்” என்கிறார்கள்.