பாலியல் குற்றாவாளிக்கு 17-வது முறை பரோல்: ‘சட்டம் அனைவருக்கும் சமம்’ என்பது வெறும் வார்த்தை தானா?

Spread the love

பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தற்போது 17-வது முறையாக பரோல் மூலம் சிறையில் இருந்து வெளிவந்திருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் குர்மீத் ராம் ரஹீம் சிங் சிறையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும் அடிக்கடி பரோல்களும் வழங்கப்படுகிறது.

குர்மீத் ராம் ரஹீம்
குர்மீத் ராம் ரஹீம்

இந்நிலையில் மீண்டும் 17-வது முறையாக சிறையில் இருந்து அவர் 21 நாட்கள் பரோலில் வெளிவந்திருக்கிறார்.

2020 ஆம் ஆண்டிலிருந்து இவர் அடிக்கடி பரோல் பெற்று சிறையிலிருந்து வெளியே வருவது தொடர்ந்து சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி, சிறைச்சாலையைத் தனது ஓய்வு விடுதியைப் போலப் பயன்படுத்துவது ‘சட்டம் அனைவருக்கும் சமம்’ என்ற ஜனநாயகத்தின் அடிப்படைத் தூணை அசைத்துப் பார்க்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட போது, தங்களுக்கு நீதி கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையும் பாதுகாப்பும் பிறந்திருக்கும்.

ஆனால், அதே குற்றவாளி அடிக்கடி அர்த்தமற்ற பரோலில் வந்து தன் இஷ்டபடி வாழ்வது, பாதுக்கப்பட்ட அந்தப் பெண்களின் மனதில் மீண்டும் எந்தளவிற்கு அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

குர்மீத் ராம் ரஹீம் சிங்
குர்மீத் ராம் ரஹீம் சிங்

குர்மீத் ராம் ரஹீம் கொடுக்கப்படும் பரோல் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கொடூரக் குற்றங்களைச் செய்தவர்களும் கூடத் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிறை விதிகளின் துளைகள் வழியே தப்பித்துவிடலாம் என்ற ஆபத்தான முன்னுதாரணத்தை இது சமூகத்தில் உருவாக்குகிறது.

சாதாரண வழக்கில் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு எளிதில் கிடைக்காத பரோல் சலுகை, ஒரு சக்திவாய்ந்த ஆன்மிகவாதிக்கும், அரசியல் பலம் கொண்ட நபருக்கும் தாராளமாக வழங்கப்படுகிறது. அதிகார பலமும் அரசியல் ஆதரவும் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?

சிறைச்சாலை என்பது குற்றவாளிகளைச் சீர்திருத்தவும், அவர்கள் செய்த கொடூரமான குற்றத்திற்குரிய தண்டனையை அனுபவிக்கவும் உருவாக்கப்பட்ட இடம். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பிறர், அந்த குற்றத்தை செய்ய தயங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், தண்டனைக் காலத்திலேயே ஒரு குற்றவாளிக்கு இப்படித் தொடர் பரோல் வழங்கப்பட்டால், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பிற்கும், சட்டத்தின் கடுமையான விதிகளுக்கும் என்ன மதிப்பு இருக்கிறது?

பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதையும் அச்சத்திலும் வேதனையிலும் கழிக்கும் போது, குற்றவாளிக்கு மட்டும் சுதந்திரமான வாழ்க்கையை அனுமதிப்பது கேலி கூத்தாக இருக்கிறது.

சட்டம்
சட்டம்

அரசியல் ஆதாயங்களுக்காகச் சட்டத்தின் துளைகளைப் பயன்படுத்தி வழங்கப்படும் இதுபோன்ற பரோல்கள் உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

இல்லையெனில் சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் முற்றிலுமாக சிதைந்துவிடும்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *