அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், உணவில் காரம், புளிப்பு மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். நிறைய பேருக்கு இப்போது நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் பழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இட்லிப் பொடி, ஊறுகாய், வத்தக்குழம்பு, காரக்குழம்பு, கிரேவி மற்றும் குருமா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
புளி சாதம், லெமன் சாதம், லெமன் ஜூஸ், சாத்துக்குடி, ஆரஞ்சு, புளித்த மோர், தயிர், நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கபசுர குடிநீர் போன்றவை வயிற்றுப் புண்ணை அதிகப்படுத்தும் என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.
அப்பளம், வத்தல், சிப்ஸ், வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா மற்றும் பிரியாணி உள்ளிட்ட அனைத்து வறுவல் மற்றும் பொரியல் வகைகளும் வயிற்றைப் புண்ணாக்கலாம் என்பதால் இவற்றையும் சாப்பிட வேண்டாம்.
மன அழுத்தம் (Stress), அதிகப்படியான கவலை மற்றும் சரியான நேரத்திற்குத் தூங்காமல் இருப்பது அமிலத்தன்மையை (Acidity) அதிகரித்து வயிற்றுப் புண்களை உண்டாக்கலாம். எனவே, மனதை அமைதியாக வைத்துக்கொள்வதும், போதுமான நேரம் தூங்குதும் அவசியம்.
பால் குடிப்பது அல்சருக்கான நிரந்தர மருந்தல்ல. அந்த நேரத்தில் ஏற்படும் வலியைப் போக்குவதற்கு மட்டுமே பால் உதவலாம், அது ஒரு மாற்று மருந்து கிடையாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.