நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி நள்ளிரவில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், “வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையிலான மசோதாவை அரசு அறிமுகப்படுத்தும். வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும்” என்றார். அதைத் தொடர்ந்து சோனம் வான்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “கடைசியாக, கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த அமைதியை உடைத்து, நம்பிக்கையிழந்த நிலையிலும் கடும் மன உளைச்சலிலும் இருக்கும் பிரதமர், நேற்றிரவு தாமதமாக வெளியிட்ட ஒரு காணொளிச் செய்தி மூலம் வினாத்தாள் கசிவு குறித்துப் பேசியுள்ளார்.
2026-ம் ஆண்டிற்கான NEET-UG தேர்வு வினாத்தாள் கசியவில்லை என்றே மோடி அரசு தொடர்ந்து மறுத்து வந்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிரதமர் தனது செய்தியாளர் சந்திப்பில் ‘கசிவு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமென்றே மறுத்தார்.
மேலும், கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடமும் வினாத்தாள் கசியவில்லை என்றே கல்வி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக மறுத்தது. கடந்த இரண்டு மாதங்களாக வெடித்த மக்கள் ஆக்ரோஷத்தின் விளைவாகவே, பிரதமர் இந்த உண்மையை இறுதியாக ஒப்புக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஆனால், இதனால்தான் மாணவர்கள் மோடி அரசின் மீது இனி எந்த நம்பிக்கையும் வைக்கப்போவதில்லை. இந்த அரசு தனது சுயநல அரசியல் கணக்கீடுகளுக்கே தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறதே தவிர, மாணவர்களின் நலனுக்கு அல்ல. 2024 NEET-UG தேர்வில் குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் முதலிடம் பிடித்தார்கள் என்ற, சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் இருந்தபோதிலும், பரவலாக நடைபெற்ற முறைகேடுகளுக்கான ஆதாரங்களை அரசு வேண்டுமென்றே மூடிமறைத்தது.
இறுதியாக, அந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஹசாரிபாக்கில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட கசிவு’ மட்டுமே நடந்ததாக ஏற்றுக்கொண்டாலும், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுத்தரத் தவறிவிட்டது.
சஞ்சீவ் முகியாவை இந்தக் கசிவின் முக்கிய குற்றவாளி என்று கூறிய பிறகும், இப்போது அவர் குற்றமற்றவர் எனக் குறிப்பிடுகிறது. அதேபோல, 2024-ல் ரத்து செய்யப்பட்ட UGC-NET தேர்வில் எந்த வினாத்தாள் கசிவும் நடைபெறவில்லை எனக் கூறி சிபிஐ (CBI) வழக்கை முடித்துவைக்கும் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஆனால் அதற்கான எந்தவொரு தெளிவான காரணத்தையும் அளிக்கவில்லை.
மெதுவாக இயங்கும் நீதித்துறையில் மட்டுமல்லாது, சிபிஐ-யின் பலவீனமான விசாரணைகள், மோடி அரசின் நேர்மையற்ற அரசியல் ஆகியவற்றிலிருந்தே இதுபோன்ற நெருக்கடி சூழல்கள் உருவாகின்றன.

மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்தோ அல்லது ஜூலை 20 அன்று அவரது காவல்துறையை மாணவர்கள் மீது ஏவிவிட்ட கொடூரமான தாக்குதல்கள் குறித்தோ பிரதமர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அதிலிருந்தே, பொறுப்புக்கூறலில் அவருக்கு இருக்கும் அக்கறையின்மை தெளிவாகத் தெரிகிறது.
எனவே, பிரதமர் என்னதான் கண் துடைப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்தாலும், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான முடிவுகள் தெளிவாக உள்ளன:
-
கல்வி அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
-
மாணவர்களைத் தாக்கியவர்களைக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
-
மாணவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்