பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்துகொண்டு திருட்டு; 40 மொபைல் போன்களைத் திருடியவரைத் தேடும் போலீஸ்

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மாதேஷ்வரி மொபைல் கடையில் மர்ம நபர்கள் திங்கட்கிழமை இரவு புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 40 ஸ்மார்ட் மொபைல் போன்களைத் திருடிச்சென்றுவிட்டனர்.

மொபைல் கடை உரிமையாளர் லட்சுமன் சென் இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள புகாரில், படிக்கட்டுப் பகுதியிலிருந்த கதவின் பூட்டை உடைத்து, மேற்கூரை வழியாக கடைக்குள் நுழைந்த திருடர்கள், சுமார் 4 முதல் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 முதல் 40 ஸ்மார்ட்போன்களைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை கடையைத் திறந்தபோது, ​​கடை முழுவதும் சூறையாடப்பட்டிருந்ததையும், விலையுயர்ந்த கைபேசிப் பெட்டிகள் காலியாகக் கிடந்ததையும், பொருட்கள் தரையில் சிதறிக் கிடந்ததையும் கண்டதாக லட்சுமன் சென் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்திருக்கும் திருடன்
பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்திருக்கும் திருடன்

புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து குற்ற நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கடையின் உள்ளேயும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​சந்தேகப்படும் நபர் ஒருவர் தனது அடையாளத்தை மறைக்கும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடியைப் போன்ற முகமூடியை அணிந்து மொபைல் போன்களைத் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இங்கு மொபைல் போன் திருடிய கும்பல் அதே இரவில், சான்வாரியா மொபைல் என்ற மற்றொரு மொபைல் கடைக்குள் நுழையவும் இதே கும்பல் முயற்சி செய்துள்ளது. அந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளிலும், முகமூடி அணிந்த அதே நபர் கடையின் ஷட்டர் பூட்டை உடைக்க முயன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *