மைக்ரோபிளேடிங் சிகிச்சையால் புருவங்களுக்கு நல்ல லிஃப்ட் (lift) கிடைக்கும். இதனால் முகம் தொய்வில்லாமல் அழகாகத் தெரியும். தினமும் புருவங்களைத் திருத்தி, வரைந்துகொண்டிருக்கத் தேவையில்லை என்பதால், இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
அனைத்து வகையான சருமம் (skin type) மற்றும் நிறம் (skin tone) கொண்டவர்களும் மைக்ரோ பிளேடிங் செய்து கொள்ளலாம். புருவங்களில் முடி குறைவாக (sparse) இருப்பவர்களுக்கு இந்தச் சிகிச்சை நிச்சயம் நல்ல பலன் தரும்.
சொரியாசிஸ் (psoriasis) அல்லது எக்ஸிமா (Eczema) போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள், தழும்புகள் உண்டாகும் கீலாய்டு (keloid tendency) தன்மை கொண்டவர்கள், சருமத்தில் ஏதேனும் தொற்று (infection) இருப்பவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் இந்தச் சிகிச்சையைத் தவிர்ப்பது நல்லது. ரொம்பவும் பர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பவர்களுக்கும் இது ஏற்றதல்ல.

ஒருமுறை செய்து கொண்டாலே நல்ல பலன் தெரியும். ஆனாலும், செய்துகொண்ட பிறகும் பராமரிப்பு தேவை. 4 முதல் 6 வாரங்களில் முதல் டச்-அப் (touch-up) செய்யப்பட வேண்டும். அதாவது மைக்ரோபிளேடிங் செய்த பிறகு பிக்மென்ட் எல்லாம் சரியாக செட்டிலாகியிருக்கிறதா என்று பார்க்க அது அவசியம். பிறகு 12 முதல் 18 மாதங்களுக்கு ஒருமுறை டச்-அப் செய்வது அவசியம்.
டாட்டூ போலவே இதுவும் காலப்போக்கில் மங்கக்கூடும். உடலில் உள்ள செல்கள் (மேக்ரோஃபேஜ்கள்) இயற்கையாகவே இந்த நிறமிகளைச் சிதைத்து அகற்றும் பணியைச் செய்கின்றன. இதை “மேக்ரோபேஜ் கிளியரன்ஸ்’ (Macrophage clearance) என்று அழைக்கிறோம். இந்தச் செயல்முறை எண்ணெய்ப் பசை சருமம் (Oily skin) உள்ளவர்களுக்குச் சற்று வேகமாக நடக்கும். அதனால் அவர்களுக்கு நிறமி விரைவில் மங்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை, மைக்ரோபிளேடிங் செய்து கொண்ட பிறகு, அது பிடிக்கவில்லை, பழைய புருவங்களே மீண்டும் வேண்டும் என்றால், எந்தவிதமான பராமரிப்பும் செய்யாமல் இருந்தால் சில மாதங்களில் நிறமிகள் தானாகவே மறைந்து, புருவங்கள் பழைய படி மாறும்.
லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் அந்த பிக்மென்ட்டை முழுமையாக நீக்க முடியும். நல்ல அனுபவமுள்ள மற்றும் கலைநயமிக்க நபரிடம் மைக்ரோபிளேடிங் சிகிச்சையைச் செய்துகொள்வது பாதுபாப்பானது. அவர்கள் தரமான பிக்மென்ட்டைப் பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
புருவங்களை மிகவும் அடர்த்தியாக மாற்றிக்கொள்ளாமல் மிதமாகச் செய்துகொண்டால் அழகான தோற்றம் தரும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.