பிரியதர்ஷினி: கேரளத்தில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் தொடக்கம்; அமைச்சர் தலையில் கொட்டிய பாயசம்

Spread the love

கேரள மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பஸ் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக பிரியதர்ஷினி என்ற பெயரில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணத்திட்டம் திருவனந்தபுரம் தம்பானூர் கே.எஸ்.ஆர்.டி.சி வளாகத்தில் முதல்வர் வி.டி.சதீசன் தொடங்கி வைத்தார். ​

விழா மேடையில் ஜீரோ டிக்கெட்டை மகளிரிடம் வழங்கி திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர் வி.டி.சதீசன்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் வி.டி.சதீசன் பேசுகையில், “ஸ்ரீ சித்திரைத் திருநாள் மகாராஜா முதல் பொதுப் போக்குவரத்து சேவையைத் தொடங்கி வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திலேயே, பிரியதர்ஷினி திட்டமும் தொடங்கப்படுகிறது.

1965-ல் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்ட பிறகு, பொதுப் போக்குவரத்துத் துறை ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

​இத்திட்டத்தின் மூலம் சாதாரணப் பெண்களின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்படும். மீனவப் பெண்கள், வீட்டு வேலைக்குச் செல்வோர், மாணவிகள், பணிக்குச் செல்வோர் மற்றும் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் இத்திட்டம் பயனளிக்கும்.

​இத்திட்டம் அமல்படுத்தப்படுவதால், மாதந்தோறும் பயணத்திற்காகச் செலவிடப்படும் தொகை மிச்சமாகி, அது குடும்பத்தின் சேமிப்பாக மாறும். இத்திட்டத்திற்காக அரசு ஆண்டுக்குச் சுமார் 800 கோடி ரூபாயை கே.எஸ்.ஆர்.டி.சி-க்கு வழங்குகிறது.

ஜீரோ டிக்கெட் வழங்கி இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் வி.டி.சதீசன்

பொதுப் போக்குவரத்து முறையை வலுப்படுத்தி, நகரங்களில் வாகன நெரிசலைக் குறைப்பதே அரசின் நோக்கம். தனியார் பேருந்துத் துறையையும் பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒரு பகுதியாகவே அரசு கருதுகிறது. தனியார் பேருந்துத் துறைக்குச் சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெண்களுக்கு அளிக்கும் கெளரவமாகவே இத்திட்டத்தை அரசு பார்க்கிறது. பதவியேற்ற பிறகு அரசு நிறைவேற்றும் முதல் அறிவிப்புத் திட்டம் இதுவாகும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, தம்பானூரில் இருந்து தலைமைச் செயலகம் வரையிலான முதல் பேருந்துப் பயணத்தில் முதல்வர் வி.டி. சதீசன், அமைச்சர்கள் சி.பி. ஜான், கே.ஏ. துளசி, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பயணித்தனர்.

அமைச்சர் பிந்துகிருஷ்ணா தலையில் கொட்டிய பால் பாயசம்
அமைச்சர் பிந்துகிருஷ்ணா தலையில் கொட்டிய பால் பாயசம்

கொல்லத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர் பிந்து கிருஷ்ணா கலந்துகொண்டு கொட்டாரக்கரா செல்லும் பேருந்தில் பயணித்தார். பயணியருக்கு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பால் பாயசம் வழங்கப்பட்டது.

அப்போது பயணி ஒருவரின் கைத்தவறி சிந்திய பாயசம், பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர் பிந்து கிருஷ்ணாவின் தலையிலும், உடலிலும் கொட்டியது. சூடான பாயசம் கொட்டியதால் அமைச்சர் பிந்து கிருஷ்ணா அதிர்ச்சியடைந்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரது தலையில் இருந்த பாயசத்தை கர்சிப்பால் துடைத்துவிட்டனர். இருப்பினும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட தூரம் வரை பயணித்தார் அமைச்சர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *