பிரேமலதா விஜயகாந்திற்கு அண்ணாமலை பாராட்டு; காரணம் என்ன?

Spread the love

கோவை கணபதி பகுதியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் செயல்படுத்திய திட்டங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை டெல்லியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டது.

இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “வானதி சீனிவாசன் கோவை, தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மருத்துவமனையில் இருந்து, நலமோடு, வளமோடு, முன்பை விட துடிப்போடு களத்திற்கு வந்துள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு தந்த அமுதம், இதம், சுயம், மோடி மகள், வாட்டர் ஏடிஎம் ஆகிய திட்டங்களால் ஏராளமான மக்கள் பயன் அடைந்துள்ளனர். கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ-வாக வரும் போது, இதுபோல பல திட்டங்களைக் கொண்டு வருவார்.

திமுக வேண்டாம் என மக்கள் தெளிவாக உள்ளார்கள். சபரீசன் பல்வேறு இடங்களுக்கு உளவுத்துறை அதிகாரிகள் உடன் சென்று வேட்பாளர்களைச் சந்தித்து பேசுகிறார். அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். இத்தனை நாட்கள் களத்திற்கு வராத சபரீசன் தோல்வி பயத்தால் தற்போது வருகிறார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

சூப்பர் சிஎம்-ஆக சபரீசன் இருக்கிறார். பிரேமலதா விஜயகாந்த்தைப் பாராட்ட வேண்டும். அவர் அவ்வப்போது உண்மையைப் பேசுகிறார். முதல்வர் முன்னிலையில் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையும், போதை கலாசாரமும் இருக்கின்றன எனப் பேசியதை வரவேற்கிறோம். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனப் பிரேமலதா சொல்வதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா?

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வாக்களித்தால்தான் சட்டமாகும். ஒட்டுமொத்த விகிதாச்சாரம் குறையாமல் மறுவரையறை செய்கிறோம்.

இதனால் தென்னிந்தியா எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இவ்விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மாற்றி வாக்கு அளிக்கும் கட்சியினருக்கு எதிராக பெண்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

அண்ணாமலை, வானதி சீனிவாசன்
அண்ணாமலை, வானதி சீனிவாசன்

பின்னர் பேசிய வானதி சீனிவாசன், “உடல்நலக்குறைவு காரணமாக ஒரு வாரம் பிரேக் எடுக்க வேண்டியதாக இருந்தது. அந்த இடைவெளியை உணர முடியாத அளவிற்கு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் களத்தில் இறங்கி ஒவ்வொரு வீடாகச் சென்று சந்தித்தார்கள்.

என் மீது அன்பு காட்டும் மக்களுக்கு நன்றி. தெற்கு தொகுதியிலும் எங்களது கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-தான் வருவார். பரிசுப் பொருட்கள் தருவது திமுகவிற்குப் புதிதா? மக்கள் சக்தி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை சூப்பர் ஸ்டார் வந்த போதும், மக்கள் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. நாங்களும் கரூரில் இருந்து எங்களது தலைவரை (அண்ணாமலையை) கொண்டு வந்துள்ளோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *