“சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியா மற்றும் அதற்கு அப்பால்” (Understanding Society: India and Beyond) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், “ஜனநாயகத்துக்கு எதிரான சவால்” என்ற அத்தியாயத்தின் கீழ் இந்தப் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
அந்தப் பாடத்தில், 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், அன்றைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது நாட்டில் தேசிய அவசரநிலையை அறிவித்தது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
மேலும், 1975 முதல் 1977 வரை அமலில் இருந்த அவசரநிலை காலத்தில் நாட்டின் ஜனநாயக அமைப்புகள் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன, பத்திரிகைகள் மீது தணிக்கை விதிக்கப்பட்டது, அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கைது செய்யப்பட்டனர் என்பதையும் பாடப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமாக கருதப்படும் அவசரநிலை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் புதிய பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தில் இந்தப் பகுதி சேர்க்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “அரசியலமைப்பு படுகொலை தினம் என்பது இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட அந்த இருண்ட காலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியுடன் இருக்க இது நம்மைத் தூண்டுகிறது. அவசரநிலையை எதிர்த்த அனைத்து சான்றோர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.
சுதந்திரத்தின் மூலமே மகிழ்ச்சி கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலமே உன்னத நிலையை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலமே நிறைவு கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலமே மிக உயர்ந்த நிலையை எட்ட முடியும்” என தெரிவித்துள்ளார்.


