அதேபோல் வீடு, மனை ஆகியவற்றில் சட்டச் சிக்கல்கள், வழக்குப் பிரச்னைகளால் தவிக்கும் அன்பர்கள் இங்கு வந்து பூமிநாதரை வழிபட, அந்தப் பிரச்னைகள் படிப்படியாக விலகும். ரியல் எஸ்டேட் மற்றும் நிலம் தொடர்பான தொழில் செய்பவர்கள், தங்களின் தொழில் சிறக்கவும் லாபம் பெருகவும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ஒவ்வொரு வாஸ்து நாளன்றும் இந்தக் கோயிலில் விசேஷ ஹோமங்கள் நடத்தப் படுகின்றன. அன்றைய தினம் சுவாமிக்கு 11 விதமான அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெறும்.
வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் வாஸ்து குறைபாடுகள் உள்ளோர், இந்த வழிபாட்டு வைபவங்களில் கலந்துகொண்டு, அருள்மிகு பூமிநாதரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டுச் சென்றால், தோஷம் – குறைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

`சொந்த வீடு’ கனவில் இருக்கும் அன்பர்கள், நிலம்-மனை சார்ந்த பிரச்னைகள் விலக வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள், ஒரு வாஸ்து நாளில் இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அந்த நாளில் செல்ல இயலவில்லை எனில், செவ்வாய்க்கிழமை அல்லது உங்களின் ஜன்ம நட்சத்திர நாளில் சென்று வழிபடலாம். பூமகள் வழிபட்ட பூமிநாதரின் திருவருளால் பிரச்னைகள் நீங்கும்; உங்களின் சொந்த வீடு கனவு நனவாகும்!
வாஸ்து நாளன்று இந்தக் கோயிலில் பூமிநாதரின் சந்நிதியில் வைத்துப் பூஜிக்கப்பட்ட செங்கற்களைப் பிரசாதமாகத் தருகின்றனர். இதற்குக் காணிக்கைக் கட்டணம் உண்டு. பூஜித்துத் தரப்படும் செங்கல்லை வீட்டில் பூஜையறையில் வைத்து, பூமிநாதரைத் தியானித்து வழிபட்டு வந்தால் விரைவில் சொந்த வீடு-மனை வாங்கும் யோகம் கைகூடுமாம்.
இப்படி வழிபட்டு, பிரார்த்தனைகள் பலித்தவர்கள் மீண்டும் வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வழிபடுகிறார்கள்.
எப்படிச் செல்வது?: புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் மார்க்கத்தில் பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 14 கி.மீ. தொலைவில் செவலூர் பிரிவு வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் கோயிலை அடையலாம்.
செவலூர் பிரிவு பகுதியிலிருந்து ஆட்டோ வசதி உண்டு. தினமும் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும்; வாஸ்து தினங்களில் காலை 7 முதல் மாலை 6 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.