புதுச்சேரி: “எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது!” – சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பகீர் தகவல்!

Spread the love

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று காலை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அரியாங்குப்பம் தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ அய்யப்பன் எம்.எல்.ஏ பேசிக் கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய இருக்கையில் இருந்தபடி முதலமைச்சர் ரங்கசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.

அதைப்பார்த்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், “உறுப்பினர்கள் பேசும் போது அமைச்சர்கள் சட்டசபையில் இருக்க வேண்டும். அதிகாரிகளை வைத்து ஆய்வு கூட்டம் நடத்த கூடாது.

ரங்கசாமி - நமச்சிவாயம்

ரங்கசாமி – நமச்சிவாயம்

உறுப்பினர் பேசும்போது, சில கோரிக்கைகள் வைப்பார்கள், அதை அமைச்சர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். முதலமைச்சரின் காதோடு காதாக உள்துறை அமைச்சர் பேசினார். இந்த நெருக்கத்தை தேர்தல் நேரத்தில் காட்டியிருந்தால் எவ்வளவோ பிரச்னை தீர்ந்து இருக்கும்” என்றார்.

அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “உறுப்பினர்கள் பலரும் வைக்கும் கோரிக்கையை முதலமைச்சருடன் பேசித்தான் தீர்க்க வேண்டும். அதைத்தான் முதலமைச்சரிடம் கூறிக் கொண்டிருந்தேன். எனக்கு எதிராக பெரும் சதியே நடக்கிறது. சபாநாயகர் உட்பட ஒரு குழுவே அதன் பின்னால் இருக்கிறது” என்றார். அப்போது எழுந்த எதிர்கட்சித் தலைவர் நாஜிம், “உள்துறை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லையா…?” என்று கேட்டுவிட்டு அமர்ந்தார்.

இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *