புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனுக்கு கார் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு டிரைவர் நியமிக்கப்படவில்லை. அரசுக்கு அதை சுட்டிக்காட்ட நினைத்த எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன், நேற்று இரு சக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு வந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசு அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவர்கள் வைத்துள்ளனர். ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் டிரைவர்கள் நியமிக்கப்படவில்லை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தருவதில்லை” என்று அதிகாரிகளைச் சாடியிருந்தார்.
அதையடுத்து எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் சட்டப்பேரவைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த வீடியோ வைரலானதிற்கு நிகராக, அவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததும் சமூக வலைதளத்தில் விவாதப் பொருளானது. அதேபோல அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் வாகனப் பதிவெண்ணும் இல்லாமல் இருந்தது.
`சாதாரண மக்களுக்கு பொருந்தும் சட்டம், எம்.எல்.ஏக்களுக்கு பொருந்தாதா?” என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து வாகனத்தில் பதிவெண் இல்லாததற்கு ரூ.500, ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.1,500/- அபராதம் விதித்தனர் போக்குவரத்துப் போலீஸார்.