Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தொடர்ச்சியாக காயம் அடைவதால், சீனியர் வீரர்களான முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா கடைசி நேரத்தில் விலகி இருப்பது, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி போட்டியில் இந்திய அணி நாளை விளையாட உள்ளது. ஏற்கனவே இலங்கையில் முகாமிட்டு இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கி உள்ளனர். ஆனால் கடைசி நேரத்தில் பும்ரா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறி இருக்கிறது. இதனால் அவசர அவசரமாக ஆகிப் நபி தார் தேர்வு செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் தொடருக்கு முன்பாகவே பும்ரா காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஓராண்டில் பும்ரா இவ்வாறு காயம் அடைவது 2வது முறையாகும்.
அவரின் வேலைப்பளுவில் பிசிசிஐ கவனமாக இருந்தும், பும்ரா காயம் அடைவது தொடர்கதையாகி இருக்கிறது. இதனால் பும்ராவுக்கு 6 மாதம் முதல் 12 மாதங்கள் வரை ஓய்வுக்கு கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளதால், பும்ராவின் கம்பேக்கில் அவசரம் காட்ட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் பும்ரா தொடர்ந்து காயம் அடைவது அனைத்து தரப்பினர் மத்தியிலும் விவாதமாகி இருக்கிறது. இதனால் பும்ராவின் இடத்தில் விளையாட சீனியர் வீரர்களான முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இவர்கள் இருவருமே உள்நாட்டு கிரிக்கெட் தொடர் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் காயமின்றி தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் இவர்களுக்கு விளையாடிய அனுபவமும் இருப்பதால், இந்திய அணிக்குள் இவர்களை கொண்டு வர வேண்டாம் என்ற பேச்சுகள் அதிகரித்து வருகிறது. இதற்கு பிசிசிஐ செவி சாய்க்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.